கொரோனாவுக்கு பலியானோரின் இறப்பு சான்றிதழில் சரியான காரணத்தை குறிப்பிட வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

238 0

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழில் சரியான காரணத்தை தமிழக அரசு குறிப்பிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த ஒருசில வாரங்களாக கொரோனா தொற்று ஏற்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இறக்க நேரிட்டவர்களுக்கு, அவர்களது இறப்பு சான்றிதழில் கொரோனா நோய்தொற்றால் இறந்தார்கள் என்று குறிப்பிடுவதில்லை. மாறாக, வேறு காரணங்களால் இறந்தார்கள் என்று இறப்பு சான்றிதழ் தருவதாக மாநிலம் முழுவதும் பல்வேறு புகார்களை பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா நோய்தொற்றினால் இறப்பவர்கள், கொரோனா வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி அடக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால், கொரோனா நோய்தொற்றினால் இறந்தவர்களை வேறு காரணங்களால் இறந்தார்கள் என்று இறப்பு சான்றிதழ் தருவதால், ஒருசிலர் இறந்தவர்களது உடல்களை வீட்டிற்கு எடுத்துச்சென்று உற்றார், உறவினர் கலந்துகொள்ளும் வகையில் இறுதிச்சடங்கை மேற்கொள்கின்றனர். இதனால் கொரோனா தொற்று முழு அளவில் பரவக்கூடிய சாத்தியம் உள்ளது.
மேலும் இறப்பு சான்றிதழில் வேறு காரணங்களை குறிப்பிடுவதால், கொரோனாவால் பெற்றோரை இழந்து வாழும் குழந்தைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்துள்ள நிவாரண உதவிகள் கிடைப்பதில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறியுள்ளனர். நேற்று (நேற்று முன்தினம்) சுப்ரீம் கோர்ட்டில் கொரோனாவால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி குறித்த வழக்கு விசாரனையின்போது, ‘அனைத்து மாநில அரசுகளும், மாவட்ட அதிகாரிகள் வாயிலாக குழந்தைகளை கணக்கெடுத்து, 24 மணி நேரத்துக்குள் சிறார் நலக்குழுக்களுக்கு தெரிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் இறக்க நேரிட்டால், அவர்களது இறப்பு சான்றிதழில் கொரோனா தொற்றினால்தான் அவர்கள் இறந்தார்கள் என்ற சரியான காரணத்தை குறிப்பிட்டு தமிழக அரசு சான்றளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.