குறுகிய கால போக்குவரத்து கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா வைரசினை கட்டுப்படுத்த முடியாது என ஹொங்கொங் பல்கலைகழக பேராசிரியர் மலிக் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
14 நாள் போக்குவரத்து கட்டுப்பாடுகளிற்கான விஞ்ஞான ரீதியிலான அவசியத்தை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளதால் மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் மூலம் கொரோனாவைரசினை கட்டுப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஏப்பிரல் நடுப்பகுதியில் இந்த கட்டுப்பாடுகளை விதித்திருந்தால் அவற்றால் பயன் ஏற்பட்டிருக்கும் என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் போக்குவரத்து தடையின் பின்னரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அதனை பரப்ப முடியும் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
ஒருவர் கொரோனாவினால் தொற்றிற்குள்ளாகி நோய் அறிகுறிகள் வெளிப்படுவதற்கு ஐந்து நாட்கள் எடுக்கலாம் என தெரிவித்துள்ள பேராசிரியர் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது வீட்டில்; உள்ள ஒருவருக்கு தொற்றை பரப்பினால் வீட்டில் உள்ளவர்கள் அறிகுறிகளை வெளிப்படுத்துவதற்கு ஐந்து நாட்கள் எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அவர்களை இரண்டுவாரங்களிற்கு தனிமைப்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மூன்றுநாள் முடக்கல் என்பது கொரோனாவைரசினை கட்டுப்படுத்துவதில் எந்த பயனையும் ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.