இலங்கையின் ஒஸ்கார் றொமேறோ இராயப்பு ஜோசப் ஆண்டகை – இரங்கல் குறிப்பில் தமிழர் மரபுரிமைப் பேரவை

481 0

மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகை, இலங்கையின் ஒஸ்கார் றொமேறோராவார் என்று இரங்கல் குறிப்பில் தமிழர் மரபுரிமைப் பேரவை குறிப்பிட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலின் பின் சமூக, அரசியல் வரலாற்று தளத்தில் தமிழின இனப்படுகொலை தொடர்பில் உண்மையைக் எடுத்துக்கூறி நீதிக்காகப் போராடிய மாமனிதரின் இழப்பு என்பது தமிழினத்திற்கும் சர்வதேசத்திற்கும் என்றுமே ஈடுசெய்யப்பட முடியாத இழப்பாகும் என்றும் தமிழர் மரபுரிமைப் பேரவை தெரிவித்துள்ளது.

அத்துடன், ஜோசப் ஆண்டகை, மதங்களைக் கடந்து தமிழின விடுதலைக்காக, இலங்கை அரச அடக்கு முறைக்கெதிராக ஓங்கி ஒலித்த குரல் விடுதலை இறையியல் மரபில் தனது குருத்துவப்பணியின் அழைப்பை புரிந்து கொண்ட ஆயரின் பணி யுத்தத்தின் கொடூங்களுக்கு மத்தியில், தானே தமிழின இனப்படுகொலையின் சாட்சியமாய் வாழ அழைக்கப்பட்ட போது, அதை விருப்புடன் ஏற்று, வாழ்ந்து, இன்று அதை மக்கள் மயப்படுத்திவிட்டு வித்தானார்.

தமிழினத்தின் தாயகம், தேசியம், சுயநிர்ணக் கோரிக்கைகளை, தமிழினத்திற்குரிய அரசியல் தீர்வாக தொடர்ந்தும் கூறிய ஆயர் தமிழினப் படுகொலைக்கும், தமிழினப் படுகொலைக்கும் வடக்கு-கிழக்கில் நடந்தேறிய திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கும் சிறிலங்கா அரசே பொறுப்பு என்ற உண்மையை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறியதன் விளைவாக பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு அரச இயந்திரத்தின் பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் பலமுறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

நீதி தவிர்ந்த அல்லது அந்நியப்படுத்தப்பட்ட சூழலில் நல்லிணக்கம் அசாத்தியமானது என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்.

இலத்தீன் அமெரிக்காவில், எல்சல்வடோர் நாட்டு அரச அடக்குமுறைக்கெதிராக மக்கள் விடுதலையை மையப்படுத்தி எவ்வாறு பேராயர் ஒஸ்கார் றொமேறோ உருவானாரோ, அதே சமூக-அரசியல் வரலாற்றுச் சூழலில் இலங்கையின் ஒஸ்கார் றொமேறோவாக ஆண்டகை செயற்பட்டார்.

தமிழ் மக்களின் கூட்டுரிமைக்காக, சிங்கள-பௌத்தமயமாக்கலுக்கெதிராக, வடக்கு-கிழக்கு நில ஆக்கிரமிப்பிற்கெதிராக, கட்டமைக்கப்பட்ட இனவழிப்பிற்கு எதிராக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதி தொடர்பில் உண்மையைத் தேடி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி, வடக்கு-கிழக்கு இராணுவமயமாக்கலுக்கெதிராக, தமிழின இனப்படுகொலைக்கு உள்ளக விசாரணையை நிராகரித்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழினத்தின் விடுதலைக்குரலாய் ஓங்கி ஒலித்த ஆயரின் பணியை தொடர்ந்து முன்னெடுப்பதே நாம் அவருக்கு செய்யும் நன்றிக் கடனாகும் என்று தமிழர் மரபுரிமைப் பேரவை மேலும் தெரிவித்துள்ளது.