என் தாயைப் பற்றி இழிவாக பேசுகிறார்… பிரசாரத்தின்போது கண்கலங்கி மக்களிடம் முறையிட்ட முதல்வர்

356 0

பெண் குலத்தை யார் இழிவாக பேசினாலும், தாயை இழிவாக பேசினாலும், ஆண்டவன் நிச்சயமாக அதற்குரிய தண்டனையை வழங்குவான் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா பிரசாரம் செய்தபோது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.
மு.க.ஸ்டாலினையும், எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டு பேசியபோது, அவர் பயன்படுத்திய வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியது. முதலமைச்சரின் பிறப்பு குறித்து ஆ.ராசா பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவ, ஆ.ராசாவுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. ஆ.ராசாவுக்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தேர்தல் களத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், சென்னை திருவொற்றியூரில் பிரசாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரம் குறித்து வேதனையுடன் பேசினார். அப்போது உணர்ச்சிவசப்பட்டு தழுதழுத்த குரலில் அவர் பேசியதாவது:-
திமுக பொறுப்பாளர் வேண்டுமென்றே எனக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்கிறார். நீங்கள் சிந்து பாருங்கள். நான் முதலமைச்சராக இருக்கறேன். இதை பேசக்கூடாது என்றுதான் இருந்தேன். இங்கே என் தாய்மார்களை பார்த்ததால் பேசுகிறேன்.
என் தாயைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரமாக பேசியுள்ளார்? ஒரு சாதாரண மனிதன் முதலமைச்சராக இருந்தால் என்னவெல்லாம் பேசுகிறார்கள்? என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். என்னென்ன பேச்சுகளை வாங்க வேண்டியிருக்கிறது? ஒரு முதலமைச்சருக்கே இப்படிப்பட்ட நிலைமை என்றால், மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது?
இவர்கள் எல்லாம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால்…? உங்களுடைய நிலைமை என்ன ஆகும்? தாய்மார்களின் நிலைமை என்ன ஆகும்? சிந்தித்து பாருங்கள்.
தாய்மார்களை கொச்சைப்படுத்தி பேசுபவர்கள், இழிவுபடுத்தி பேசுபவர்களுக்கு தக்க தண்டனையை நீங்கள் வழங்க வேண்டும். யார் பெண் குலத்தை இழிவாக பேசினாலும், தாயை இழிவாக பேசினாலும், ஆண்டவன் நிச்சயமாக அதற்குரிய தண்டனையை வழங்குவான்.
இவ்வாறு அவர் பேசினார்.