2025 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தை ஆளக்கூடிய வகையில் மலையக மக்கள் முன்னணி உருவாகுமெனத் தெரிவித்த, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட எம்.பியுமான கலாநிதி வேலுசாமி இராதா கிருஷ்ணன், கூட்டொப்பந்தம் இனிமேல் முத்தரப்பு ஒப்பந்தமாக இருக்க வேண்டும் எனக் கோரிநின்றார்.
பல நெருக்கடிகளால், மலையக மக்கள் முன்னணி பல துன்பங்களை அண்மையக்காலமாக சந்தித்து வருகின்றது. அனுஷா சந்திரசேகரனின் விலகல், அரவிந்தகுமாரின் செயற்பாடு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழுத்தம், எதிர்க் கட்சியில் இருக்க வேண்டிய நிலை. என்பன முக்கியமானவையாகும் எனத் தெரிவித்த அவர், இவற்றுக்கு மத்தியிலேயே பொதுச் செயலாளராக பேராசிரியர் விஜேசந்திரன் செயற்படுகின்றார் என்றார்.
மலையக மக்கள் முன்னணியின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு ஹட்டனில் முன்னணியின் தலைமை காரியாலய மண்டபத்தில் நேற்று (14) நடைபெற்றது. பிரதம பேச்சாளராக சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி. சோபனா ராஜேந்திரன் கலந்து சிறப்பித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
‘2025 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தை ஆளக்கூடிய நிலையில், மலையக மக்கள் முன்னணி இருக்கும். அதற்காக, தற்போதிருக்கும் ஒற்றுமையை சகலரும் இறுகப்பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.
கூட்டொப்பந்தம் இனிமேல் முத்தரப்பு ஒப்பந்தமாக இருக்க வேண்டும். ஏனெனில், அதன்போதுதான் மலையக மக்களின் பிரச்சினைகள் அரசாங்கத்துக்கு தெளிவுப்படுத்தப்படும் எனத் தெரிவித்த அவர், தற்போது கூட்டு ஒப்பந்தத்தில் தொழிற்சங்கங்களும் கம்பனிகளும் கைச்சாத்திடுகின்றன. எனவே, மூன்றாவது தரப்பாக அரசாங்கத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
மலையக மக்கள் முன்னணியின் சின்னம் மண்வெட்டியாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

