தஞ்சை அருகே பள்ளி மாணவிகள் 20 பேருக்கு கொரோனா- 2 வாரத்துக்கு விடுமுறை அறிவிப்பு

401 0

தஞ்சை அருகே அம்மாப்பேட்டையில் உள்ள பள்ளியில் படிக்கும் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பள்ளிக்கு 2 வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தற்போது 9 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடந்து வருகிறது. இதில் 1,100 மாணவிகள் கல்வி கற்று வந்தனர். இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாமல் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவிக்கும், அவருடன் படிக்கும் சக மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி கடந்த 11-ந்தேதி 460 மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதையடுத்து 16 மாணவிகள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 4 மாணவிகள் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 12-ந்தேதி மாணவிகள் 619 பேருக்கும், ஆசிரியைகள் 35 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் இன்னும் வரவில்லை.
இதையடுத்து பள்ளியில் உள்ள அனைத்து அறைகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிக்கு இருவார காலம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.