அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் கொரோனாவிலிருந்து 76 சதவீத பாதுகாப்பை அளிப்பதாக தெரிவிப்பு

308 0

சுகாதார அதிகாரிகளின் தரவின் அடிப்படையில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் ஒரு நபருக்கு கொரோனா வைரஸிலிருந்து 76 சதவீத பாதுகாப்பை அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மருத்துவ சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஒரு மாநாட்டில் உரையாற்றிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசகர் நோயெதிர்ப்பு நிபுணர் டாக்டர் தனுஷா தசநாயக்க, அஸ்ட்ராசெனகா இரண்டாவது டோஸ் முழுமையாக பாதுகாக்கும் என்றாலும் முதல் டோஸிலிருந்து ஒரு நபருக்கு ஒருவித பாதுகாப்பு இருப்பதை கண்டறிந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 10-12 வாரங்களில் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசிக்கான உடனடி எதிர்வினை பொதுவாக 48-72 மணி நேரம் நீடிக்கும் என்றும் பெரும்பாலும் இளைய தலைமுறையினரே மிருதுவான பக்க விளைவுகளை எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட பின்னர், காய்ச்சலைக் குறைக்க பெரசிட்டமோல் எடுத்துக்கொள்வது தடுப்பூசியின் தாக்கத்தைக் குறைக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் தனுஷா தசநாயக்க கூறியுள்ளார்.

இதற்கிடையில், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் ஆலோசகர் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் தீபா கமகே தெரிவித்தார்.