இரணைதீவு பகுதியில் உடல்கள் அடக்கம்- அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டம்

260 0

கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடலை கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானதிற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நாளை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அத்தோடு இந்த தீர்மானம் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் இரணைதீவு அருட்தந்தை தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் சகோதரர்களால் பல்வேறு பகுதிகள் முன்மொழியப்பட்டபோதும் அவற்றை தவிர்த்து, பல இன்னல்கள் மற்றும் பல கட்ட போராட்டங்களின் பின்னர் 2017 ஆம் ஆண்டு மீள் குடியேறிய குறித்த பகுதியை தெரிவு செய்தமை கவலை அழிப்பதாக குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் இரணைதீவு பகுதியானது நீரேந்து பிரதேசமாக காணப்படுவதனால் கொரோனா தொற்றுள்ள உடல்களை புதைப்பதனால் நீர் ஊடாக தொற்று பரவ வாய்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைக் காலமாகவே இரணை தீவு மக்கள் குடியேறி படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்ற நிலையில் அரசாங்கத்தின் இம்முடிவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதிலை எனவும் இரணைதீவு அருட்தந்தை தெரிவித்துள்ளார்.

தற்போது 165 குடும்பங்கள் அட்டை பண்ணைகளை அமைத்து அங்கு வசித்து வருவதால் அவர்களின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகியுள்ள நிலையில் நாளை போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அருட்தந்தை  குறிப்பிட்டார்.