வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கடந்த 2020 மார்ச் முதல் நேற்று முன்தினம் வரையான காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
மன்னார் மாந்தை மேற்கில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் உட்பட வடக்கில் நேற்றுமுன்தினம் மட்டும் 42 பேருக்கு கொரோனா தொற்றுகண்டறியப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட 443 பேரின் பி.சி.ஆர். பரிசோதனையில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் மன்னார் மாந்தை மேற்கைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள் கடந்த வாரம் திருமண நிகழ்வுஒன்றில் பங்கேற்றிருந்தனர். இந்தத் திருமண நிகழ்வில் மன்னார் ஆடைத் தொழில்சாலை தொற்றாளர்களுடன் தொடர்புடையோரும் பூநகரி வலைப்பாடு கிராமத்தில் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பங்கேற்றுள்ளனர்.
இவ்வாறு திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களிலேயே ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், மன்னார் மடுப் பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவருக்கும் கொரோனா தொற்று நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது.
இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் விபத்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் பொறுப்பு தாதிய உத்தியோகத்தர், தாதிய உத்தியோகத்தர் மற்றும் நோயாளி ஒருவருக்கும் என மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அத்துடன், சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண்ணொருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவரது வீட்டுக்கு மன்னாரிலுள்ள உறவினர்கள் வந்து திரும்பிய நிலையில் தொற்று அறிகுறியுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இவரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைவிட, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் பருத்தித்துறையைச் சேர்ந்த 13 பேருக்கு
தொற்று உறுதி செய்யப்பட்டது என்றார்.

