மத்திய சுகாதார அமைச்சினால் வடமாகாண வைத்தியசாலைகளுக்கு 50 மருத்துவ அதிகாரிகள் நியமனம்

208 0

மத்திய சுகாதார அமைச்சினால் வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு 50 மருத்துவ அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தனர்.

நேற்று திங்கட்கிழமை 15ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ,இது தொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இவர்களில் யாழ் மாவட்டத்திற்கு 13 பேரும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 9 பேரும், வவுனியா மாவட்டத்திற்கு 11 பேரும், மன்னார் மாவட்டத்திற்கு ; 9 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 8 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்

இவர்கள் அனைவரும் நேற்று தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்டனர்.

இந்நியமனத்தில் வடமாகாணத்தின் கஷ்ட பிரதேசங்களிலுள்ள சில வைத்தியசாலைகளுக்கும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊர்காவற்றுறை, அனலைதீவு வைத்தியசாலைகளுக்கும், வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம், நெடுங்கேணி வைத்தியசாலைகளுக்கும் மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார் சிலாவத்துறை, வங்காலை வைத்தியசாலைகளுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி, புதுக்குடியிருப்பு, அலம்பில், சம்பத்நுவர ஆகிய வைத்தியசாலைகளுக்கும் மருத்துவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.