வெளிமாவட்ட பக்தர்களுக்கு தடை – திருக்கேதீஸ்வர நிர்வாகம்

166 0

மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழாவின் போது வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தருகின்றவர்களை தவிர்த்து மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களின் பங்களிப்புடன் மஹா சிவராத்திரி விழாவை கொண்டாட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை கருத்தில் கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று (15) திங்கட்கிழமை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி தலைமையில் மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழா தொடர்பாக இடம் பெற்ற விசேட கலந்துரையாடலில் இத் தீர்மானம் எட்டப்பட்டது.

எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதி இடம் பெறவவுள்ள மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழாவினை சுகாதார முறையினை கடைப்பிடித்து எவ்வாறு சிறப்பாக நடத்துவது தொடர்பாகவும்,

வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தருகின்றவர்களை தவிர்த்து மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களின் பங்களிப்புடன் மஹா சிவராத்திரி விழாவை கொண்டாட எவ்வாறான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படலாம் என்பது தொடர்பிலும்,

கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ஆலய பகுதிகளில் மக்கள் நடந்து கொள்ள வேண்டிய அறிவுறுத்தல்கள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக வெளி மாவட்டத்தில் இருந்து இம்முறை வருகை தரவுள்ள மக்கள் தமது மாவட்டங்களிலே சிவராத்திரி நிகழ்வை அனுமதிக்குமாறு கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

கொரோனா தொற்றின் பரவலை தடுக்கும் வகையில் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழாவின் போது பாலாவி தீர்த்தக்காவடி நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே திருக்கேதீஸ்வரத்திற்கு வருகின்றவர்கள் சுகாதார நடை முறைகளை உரிய வகையில் பின் பற்றிக்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலின் போது திணைக்கள தலைவர்கள், திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குருக்கள், ஆலய நிர்வாக சபையினர், பொலிஸார், சுகாதார துரையினர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.