தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மறுநாள் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரம்

208 0

தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி ஏற்கனவே தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்தை முடித்துள்ளார்.

இந்நிலையில், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளில் நாளை மறுநாள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் அன்று காலை 10.15 மணிக்கு வாகைகுளம் விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கு அவருக்கு அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தொடர்ந்து காலை 11 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். 12 மணிக்கு திருச்செந்தூரில் மகளிர் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். மதியம் 1 மணிக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மாப்பிள்ளையூரணியில் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் பழனிசாமி பேசுகிறார். மாலை 6 மணிக்கு தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்வதால் வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ, தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.