தமிழர் பகுதிகள் மீதான ஆக்கிரமிப்பின் ஆரம்பமே குருந்தூர் மலையில் அரங்கேறியுள்ளது- சிவமோகன்

208 0

தமிழர் பகுதிகள் மீது ஆக்கிரமிப்பினை மேற்கொள்வதற்கான ஆரம்பகட்டமாகவே குருந்தூர் மலை விடயத்தை பார்ப்பதாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொல்லியல் திணைக்களத்தாலும் பொலிஸாரினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குமுழமுனையில் அமைந்துள்ள தமிழர் வழிபாட்டுப் பிரதேசமான குருந்தூர் மலைக்கு நேரடியாக விஜயம் ஒன்றினை நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையிலேயே இவ்விடயம் தொடர்பாக சி.சிவமோகன்  இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இதுவொரு தமிழர் பிரதேசம். இங்கு எமது மக்களால் ஐயனார் ஆலயம் பராமரிக்கப்பட்டு அதனை வழிபட்டு வந்தனர் என்பதுதான் தமிழர் வரலாறு.

இனரீதியாக தமிழர்களிற்கெதிராக உயர்மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஒன்றிற்கமைவாக பொய்யினை கூறி, தொல்லியல் திணைக்களம் ஆராய்ச்சி என்ற போர்வையில் இங்கு வந்துள்ளது.

மேலும், திட்டமிட்டு தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தினால் தமிழர் பகுதிகள் மீதான ஆக்கிரமிப்பினை மேற்கொள்வதற்கான ஆரம்பகட்டமாகவே நான் இதனைப் பார்க்கிறேன்.

குறித்த செயற்பாட்டின் மூலம் முல்லை மண்ணில் பாரிய ஆக்கிரமிப்பு ஒன்று நடைபெறுகின்றது. இந்த ஆக்கிரமிப்பில் இருந்து நாம் எப்படி பாதுகாப்பாக இருக்கபோகிறோம் என்பது கேள்விக்குறியான ஒன்றாகவே இருக்கிறது.

இந்த மலையின் கரைப்பக்கமாகத் தான் எங்களால் வரமுடிந்துள்ளது. இந்த மலையில் ஏறி என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையாக தொல்பொருள் ஆராய்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை என்பதற்கு இதுவொரு ஆதாரம்.

நான் ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூறியிருந்தும் அவர்கள் என்னை மலைப்பிரதேசத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. உண்மையாக ஒரு தொல்பொருள் ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டுமாகவிருந்தால் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் உள்வாங்கப்பட்டு இது செய்யப்பட்டிருக்கவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.