குருந்தூர் மலையின் அகழ்வு ஆராய்ச்சியில் தமிழர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்- சார்ள்ஸ் கோரிக்கை

214 0

குருந்தூர் மலையில் ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தை காலம் காலமாக மக்கள் வழிபட்டு வந்தனர். இந்நிலையில் இந்து ஆலயத்தின் அடையாளங்களை அழித்ததுடன் அப்பகுதியில் தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து, அகழ்வு பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக  நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பகலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்க ஆகியோருக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, “தொல்பொருள் திணைக்களத்தின் ஆலோசனையில் கடந்த திங்கட்கிழமை,  அகழ்வு பணிகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் தாங்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டீர்கள்.

அதன்போது இந்துக் கடவுளின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருந்ததுடன், அகழ்வு பணியில் யாழ்.பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் விரிவுரையாளர்களையோ யாழ்.பிராந்திய தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் ஆராய்ச்சி உதியோகத்தர்களையோ உள் வாங்காமல் ஆரம்பித்தமையினால் தமிழ் மக்களும் நானும் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம்.

மேலும் ஆராய்ச்சி பணி, வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன்.

எனவே, யாழ்.பல்கலைக்கழகத்தினரின் தொல்பொருள் பீடத்தினரையும் யாழ்.பிராந்திய தொல்பொருள் திணைக்கள ஆராய்ச்சி உத்தியோகத்தர்களையும் இணைத்துக் கொள்ளும்படி தங்களை கேட்டுக்கொள்கின்றேன்” என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.