தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன்- ப.சத்தியலிங்கம்

342 0

தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

உலகத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களும் நேற்றைய தினம் கார்த்திகை தீப திருநாளை மிகவும் சிறப்பாக அனுஷ்டித்தனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை)  வடக்கிலுள்ள தமிழர்கள் கார்த்திகை தீப திருநாளை அனுஸ்டித்தபோது, இராணுவத்தினர் பல இடங்களிலும் சமய அனுஸ்டானங்களை செய்யவிடாது தடுத்துள்ளனர்.

இந்நிலையிலேயே குறித்த செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து  ப.சத்தியலிங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கார்த்திகை தீபம் ஏற்றிய இந்துக்களை அச்சுறுத்தி தீபங்களை வீசியெறிந்த இராணுவத்தினரின் செயல் உச்சபட்ச அடக்குமுறையாகும்.

இச்செயலை வன்மையாக கண்டிப்பதோடு, இலங்கையில் சமய, கலாச்சார நிகழ்வுகளை சிறுபாண்மையினர் அச்சமின்றி கடைப்பிடிக்கும் சூழல் ஏற்படவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.