கட்சி தொடங்குவது எப்போது? -மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை

230 0

அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக எதிர்பார்த்து வருகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பை நடத்திய ரஜினிகாந்த், ‘தான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று அறிவித்தார். அதன் பிறகு அவர் எப்போது அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ரஜினியிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் 29-ந் தேதி ரஜினிகாந்த் பெயரில் வெளியான அறிக்கை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஜினி அரசியலுக்கு வருவது சந்தேகம்தான் என்ற கருத்தும் பரவியது.
இது குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், தனது உடல் நிலை மற்றும் டாக்டர்கள் அளித்த அறிவுரைகள் தொடர்பாக அந்த அறிக்கையில் உள்ள தகவல் உண்மைதான் என்றார். அதேசமயம், அரசியல் கட்சி குறித்து, தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து தெரிவிப்பதாக கூறினார்.
ரஜினிகாந்தின் அறிவிப்பால் அவர் அரசியல் கட்சி தொடங்குவாரா? மாட்டாரா? என்பது தொடர்பான சஸ்பென்ஸ் ரசிகர்கள் மத்தியில் நீடித்தது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக, சென்னை வரும்படி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்த் திடீர் அழைப்பு விடுத்தார்.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. ரஜினி மக்கள் மன்ற 38 மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான நிர்வாகிகள் காலை 9 மணிக்கே மண்டபத்திற்கு வந்துவிட்டனர்.
தற்போது அரசியல் கட்சி தொடங்கும் சூழல் உள்ளதா? என்பது குறித்து நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் கேட்டறிகிறார். நிர்வாகிகள் தங்கள் பகுதி நிலவரங்கள் மற்றும் தங்களின் கருத்துக்களை ரஜினியுடன் பகிர்ந்துகொள்கின்றனர்.
கட்சி தொடங்கினால் தேர்தல் களத்தை எவ்வாறு சந்திப்பது, பிரசார பணிகளை எவ்வாறு மேற்கொள்வது? என்பது குறித்தும் விவாதிக்க உள்ளார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடத்தும் ஆலோசனைக்கேற்ப ரஜினி அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.