மாவீரர் நினைவேந்தல் – பொலிஸாரினால் பெறப்பட்ட தடையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி

246 0

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலையில் மாவீரர்களை நினைவு கூருவதை தடுக்கும் வகையில் பொலிஸாரினால் பெறப்பட்ட தடையுத்தரவினை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மாவீரர் நினைவேந்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவடி முன்மாரி துயிலும் இல்லத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் விளக்கேற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அவருக்கு எதிராக பொலிசார் நீதிமன்ற தடை உத்தரவு ஒன்றைப் பெற்று அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த நிகழ்வு இடம்பெறும் இடத்தில் கொரோனா தொற்று ஏற்படும் மற்றும் விடுலைப் புலிகளை மீண்டும் கட்டியழுப்புவதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த தடை உத்தரவுக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் 27 சட்டத்தரணிகள் ஆஜராகி வழக்கு தாக்குதல் செய்தனர்.

இந்த வழக்கை ஆராய்ந்த நீதவான் இன்று வியாழக்கிழமை வரை வழக்கை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், தடை உத்தரவுக்கு எதிராக தாக்குதல் செய்யப்பட்ட வழக்கை நீதவான் நிராகரித்ததுடன், மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கு ஏற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை விதித்து கட்டளை பிறப்பித்துள்ளார்.