டுபாயில் 20,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பிரம்மாண்ட சைக்கிள் பயணம்!

274 0

டுபாயின்  பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அறிவித்தபடி இந்த ஆண்டின் ‘பிட்னெஸ் சேலஞ்ச்’ உடற்பயிற்சி நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறன.

வருகிற 28அம் திகதி வரை 30 நாட்கள் நடைபெறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடற்பயிற்சி சவால் நிகழ்ச்சிகளில் இலவச பயிற்சி தினமும் 30 நிமிடங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நேற்று நடத்தப்பட்ட சைக்கிள் பயணத்தில் கலந்து கொள்ள பட்டத்து இளவரசர் அழைப்பு விடுத்திருந்தார்.

இதில் இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு பட்டத்து இளவரசருடன் ‘டுபாய் ரைடு’ என்ற தலைப்பில் சைக்கிள் பயணத்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந் நிலையில் பொதுமக்களுக்காக டுபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் இத்தாலி நாட்டு நிறுவனம் தயாரித்த சைக்கிளுடன் தனது பயணத்தை நேற்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கினார்.

அவரது தலைமையில் டுபாயில் வசிக்கும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

டுபாயின் பிரதான வீதகள் முதன் முறையாக முழுவதும் இச்  சைக்கிள் பயணத்திற்காக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் காலை 8 மணியளவில் சைக்கிள் பயணம் நிறைவு பெற்றது.

இது குறித்து டுபாய் பட்டத்து இளவரசர் தனது டுவிட்டர் பக்கத்தில், “இன்று (அதாவது நேற்று) நடைபெற்ற சைக்கிள் பயணத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. உங்களுடைய நேர்மறையான மனப்பான்மைக்காக ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி மூலம் ஒரு துடிப்பான, ஆற்றல் மிக்க டுபாயை காணமுடிந்தது. எதிர்கால சவால்களை எதிர்கொள்வதை டுபாய் நன்கு அறிந்துள்ளது” என்று கூறியுள்ளார்.