அமெரிக்க அதிபர் தேர்தல் – மனைவியுடன் வந்து வாக்களித்தார் ஜோ பிடன்

278 0

அமெரிக்க அதிபர் தேர்தலில் மனைவி ஜில்லுடன் வந்து ஜோபைடன் வாக்களித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
அதிபர் தேர்தல் நவம்பர் 3-ம் தேதி என்றாலும், முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை அமெரிக்காவில் உண்டு. வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவே முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி உண்டு.
தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சனிக்கிழமை புளோரிடாவில் வாக்களித்தார்.
இந்நிலையில், அதிபர் டிரம்பை எதிர்த்துப் போட்டியிடும் ஜோ பிடன், அவரது மனைவி ஜில்லும் தேர்தல் தினத்திற்கு முன்னதாகவே தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர். வில்மிங்டனில் உள்ள வாக்குச் சாவடியில் பிடன் வாக்களித்தார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் ஜோ பிடன் கூறியதாவது:
பிலடெல்பியாவில் கருப்பின இளைஞரை போலீசார் சுட்டுக்கொலை செய்த நிலையில் வெடித்த வன்முறைச் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். தான் அதிபரானால் போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
ஏற்கனவே அதிபர் தேர்தலையொட்டி கிட்டத்தட்ட 5 கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.