மட்டக்களப்பில் நாளைமுதல் ஒருவார காலத்துக்கு சிகை அலங்கார நிலையங்களுக்கு பூட்டு

497 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை முதல் எதிர்வரும் ஒருவாரத்திற்கு சகல மதத்தலங்களில் மக்கள் ஒன்றுகூடும் வழிபாடுகள் இடைநிறுத்தம், சிகை அலங்கார நிலையங்களுக்கு பூட்டு வர்த்தக நிலையங்களில் அனைத்துவிதமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும் இந்த தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் க. கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாழைச்சேனைப் பிரதேசத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டுபிடிக்கப்பட்டதுடன் இரண்டாங்கட்ட தொடர்பாளர்கள் 500 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்ட கொரோனா தடுப்பு செயலணிக் கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது இதற்கமைய உடன் அமுலுக்கு வரும்வகையில் தொற்று பரவாமலிருக்க இறுக்கமான தீர்மானங்கள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது தொற்று அபாயம் நிலவும் பிரதேசங்களில் அரச திணைக்களங்களில் 15 தொடக்கம் 20 வரையான உத்தியோகத்தர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படவுள்ளதுடன் ஏனைய பகுதிகளில் சுகாதார நடைமுறைகளைப் பேணி செயற்பட அனுமதிக்கபட்டுள்ளது.

நாளை முதல் எதிர்வரும் ஒருவாரத்திற்கு சகல மதத்தலங்களில் மக்கள் ஒன்றுகூடும் வழிபாடுகளை இடைநிறுத்தவும் மிக அவசியமாக நடாத்தப்படவிருப்பின் மதகுரு உட்பட ஐவர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர் எனவும் சிகை அலங்கார நிலையங்கள் உடன் செயற்படும் வண்ணம் மூடப்படவேண்டும் எனவும் ஏற்கனவே தீர்மனிக்கப்பட்ட திருமண நிகழ்வுகளுக்கு அப்பகுதி சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகமைவாக செயற்படுவதுடன், மரணங்கள் ஏற்படின் 15 பேர் மாத்திரம் நல்லடக்க நிகழ்வில் கலந்து கொள்ளமுடியும்.

இதுதவிர நகர்ப்புறங்களான மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர், களுவாஞ்சிக்குடி போன்ற பிரதேசங்களில் சனநடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தவும் வர்த்தக நிலையங்களில் அனைத்து விதமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும் சந்தைகளை திறந்த மைதானங்களில் நடாத்துவதுடன், உணவகங்களில் உட்காந்து உண்பதற்கு 50 வீதம அனுமதிக்கப்படுவர் எனவும் பொதுப் போக்குவரத்தில் ஆசனங்களுக்கு அளவான பயணிகளையே ஏற்றப்படல் வேண்டும். இவற்றுக்கு மேலதிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் மக்கள் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்த பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் நடமாடும் காவல் பிரிவு செயற்படுவதுடன் பொதுமக்கள் இருவருடன் அரச உத்தியோகத்தர்கள் மூவரும் இணைப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விசேட பணிகள் அங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கமைய நாளை முதல் ஒரு வாரகாலத்துக்கு இந்த நடைமுறை இருக்கும் என அவர் தெரிவித்தார்.