முள்ளிவளையில் மோட்டார் சைக்கிள் விபத்து! தீயில் எரிந்து இளைஞர் பலி

254 0

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிவளை பிரதான வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் இளைஞர் ஒருவர் எரிந்து உயிரிழந்துள்ளார்.

முள்ளிவளை 02ஆம் வட்டாரம் முள்ளிவளையைச் சேர்ந்த கவிஞன் (வயது 22) என்றும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முள்ளிவளை – ஒட்டுசுட்டான் வீதி, ஆலடிச் சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திப்பற்றி எரிவதை அவதானித்த அயலவர்கள் மற்றும், வீதியில் சென்றவர்களும் ஓடிச் சென்று தீயை அணைத்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றனர்.

இருந்தபோதிலும் மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞர் உடல்கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. வேறு வாகனங்களுடன் மோதி ஏற்பட்ட விபத்தா? அல்லது திட்டமிட்ட நடவடிக்கையா? என்பது தெரியவரவில்லை. அதேவேளை ஆலமரத்துடன் மோதியே விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே விபத்தில் சிக்கிய இளைஞர் முள்ளியவளை கமநலசேவைத் திணைக்களத்துக்கு அருகாமையில் வசிப்பவர் என்றும், அவர் மோட்டார் சைக்கிள் திருத்தகம் ஒன்றில் பணியாற்றிவருபவர் என்றும் தெரியவருகிறது.

மேலும் இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் முள்ளியவளைப் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.