கிழக்கில் ஊரடங்கு: ’விரைவில் அறிவிப்போம்’

274 0

கிழக்கு மாகாணத்தில், திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை பிரதேசத்தில்   பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை எங்கு  அமுல்படுத்த வேண்டும் என்பதை, தாங்கள் மிக விரைவில் அறிவிப்போமென, கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டொக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

அம்பாறை – கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், இன்று (24) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கிழக்கு மாகாணத்தில் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றவர்கள் மூலம் மட்டக்களப்பு, திருகோணமலை, பொத்துவில், கல்முனை   போன்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அம்பாறை – கல்முனை பிராந்தியத்தில் தற்போது 08 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனரெனவும் கூறினார்.

‘தற்போதைய தகவல்களின் படி மட்டக்களப்பு வாழைச்சேனை – 11, நிந்தவூர் – 1, பொத்துவில் -5, கல்முனை – 3, திருகோணமலை – 6 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
‘கல்முனையில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து கல்முனை மாநகர பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமாக அமுல்படுத்துவதற்கும் இவற்றை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

‘இதன் பிரகாரம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்   திருமண வைபவங்கள்,கூட்டங்கள், விளையாட்டு மற்றும் களியாட்ட நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து பொது நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

‘பொது நூலகங்கள் பூட்டப்படுவதுடன் கடற்கரை, சிறுவர் பூங்காக்கள், மைதானங்கள், கடைத் தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது’ எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அம்பாறை நகரில் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளாரெனத் தெரிவித்த அவர், இவர் திவுலப்பிட்டியில் நடந்த திருமண வீடொன்றுக்குச் சென்று திரும்பிவந்தவர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகிறதெனவும் கூறினார்.மேலும், நிந்தவூரில் இனங்காணப்பட்ட பெண்ணின் தொற்று எங்கிருந்து வந்தது என்பது இன்னும் ஊர்ஜிதமாகவில்லையெனத் தெரிவித்த அவர், இன்னும் பலர் சமூகத்துள் மறைந்து வாழ்ந்து வருகின்றனரெனவும் கூறினார்.