சஹ்ரான் குழு பயன்படுத்திய கார் மறைத்துவைக்கப்படிருந்த நிலையில் கண்டெடுப்பு!

312 0

பயங்கரவாதி சஹ்ரான் குழு பயன்படுத்திய கார் மறைத்துவைக்கப்படிருந்த நிலையில் மட்டக்களப்பு காத்தான்குடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் உள்ள முகமது கனிபா முகமது அக்கிரம் என்பவர் பயன்படுத்தி வந்த காரே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கார், மட்டக்களப்பு, காத்தான்குடி றிஸவி நகரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு குற்றவியல் பிரிவு பொலிஸார் மீட்டு காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் முகமது கனிபா முகமது அக்கிரம் என்பவர் கடந்த வருடம் ஏப்ரல் 25ஆம் திகதி காத்தான்குடியில் வைத்து கைதுசெய்யப்பட்டு மொனராகலை சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், முகமது கனிபா முகமது அக்கிரம் என்பவரின் பெயரில் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த குறித்த கார் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, இன்று மாவட்ட குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி. டி.எஸ்.டி. பண்டார தலைமையில் என்.அன்பரசன், அருள்குமார், பந்துல, சரோன் ஆகியோர் கொண்ட பொலிஸ் குழுவினர் குறித்த பிரதேசத்தில் கார் தரிப்பிடம் ஒன்றில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக மறைத்து வைக்கப்பட்டிருந்த காரை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த காரில் காத்தான்குடியில் இருந்து நுவரெலியா பயிற்சி முகாமிற்கு பயிற்சிக்காக பயிற்சியாளர்களை கொண்டுசெல்ல பயன்படுத்தப்பட்டதா என்ற அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.