தமிழ்த் தேசியக் கட்சிகள் மீண்டும் நாளை யாழ்ப்பாணத்தில் கூடுகின்றன

322 0

தியாகி திலீபனின் நினைவேந்தலுடன் இணைந்து செயற்படும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நாளை சனிக்கிழமை காலை நடைபெறவிருக்கின்றது. இதற்கான அழைப்பை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோனாதிராஜா விடுத்திருக்கின்றார்.

“தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் 20 ஆவது திருத்தம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பவற்றுடன் எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவதற்கான வேலைத் திட்டங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் ஆராயப்படும்” என மாவை சேனாதிராஜா தினக்குரல் இணையத்துக்குத் தெரிவித்தார்.

“ஏற்கனவே நாம் சந்தித்துப் பேசியிருக்கின்றோம். ஒரு உண்ணாவிரதப் போராட்டம், ஹர்த்தால் என்பவற்றை இணைந்து நடத்தியிருக்கின்றோம். இந்த நிலையில் அடுத்த கட்டச் செயற்பாடுகளையிட்டு நாம் ஆராய வேண்டியிருக்கின்றது. குறிப்பாக 20 ஆவது திருத்தச் சட்டம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பன குறித்து மற்றைய கட்சிகளின் கருத்துக்களை அறிய வேண்டியுள்ளது.

அதனைவிட தமிழ் மக்களுடைய உரித்துக்கள், அதற்கான என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து நாம் சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கின்றது. ஒன்றாக இணைந்து செயற்படக் கூடிய இந்த சந்தர்ப்பத்தில் அடுத்த கட்டமாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையிட்டு நாளைய சந்திப்பில் முக்கியமாக ஆராயவுள்ளோம்” எனவும் மாவை சேனாதிராஜா   தெரிவித்தார்.