புதிய அரசியல் திருத்தத்திற்கு எதிராக மக்களின் எதிர்ப்பினை வலுக்கச்செய்வதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்

230 0

புதிய அரசியல் திருத்தத்திற்கு எதிராக மக்களின் எதிர்ப்பினை வலுக்கச்செய்வதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறிலின் அலுவலகத்திற்கு விஜயம் செய்திருந்த நிலையில் நேற்று(15) செய்தியாளர் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் முக்கியமாகத் தெரிவித்ததாவது;

“புதிய அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு எதிராக பல்வேறு பிரச்சாரங்களை செய்து வருகின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்திலும் செயலமர்வு எம்மால் நடாத்தப்பட்டது. அம்பாறை காரைதீவு பகுதியிலும் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து இத்திருத்தம் குறித்து கலந்துரையாடியுள்ளோம். இப்புதிய திருத்தத்திற்கு எதிராக மக்களின் எதிர்ப்பினை வலுக்கச்செய்வதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

ஏனெனில் இத்திருத்தமானது ஜனநாயக விரோத செயலாக உள்ளது.இதனை நிறைவேற்ற நாங்கள் அனுமதித்தால் இந்நாட்டில் ஜனாநாயக கட்டமைப்பினை பேணாது மக்களுக்கான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க முடியாமல் போகும். அது போன்று நிலம் சம்பந்தமான பல திட்டங்களையும் அரசாங்கம் தற்போது அமுல்படுத்தி வருகின்றது.எனவே தான் இத்திருத்தத்தை நிறைவேற்றாமல் ஜனநாயக பண்பினை பேண வேண்டியது எமது கடமையாக உள்ளது. எனவே பொறுத்திருந்து பாருங்கள்” எனக் கூறினார்.

இவ்விஜயத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.