உயிருடன் இருந்த அண்ணனை குளிர்பதன பெட்டியில் வைத்த தம்பி

314 0

சேலத்தில் உயிருடன் உள்ள அண்ணனை இறந்துவிட்டதாக கூறி அவரது தம்பியே குளிர்பதன பெட்டியில் வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் கந்தம்பட்டி பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணிய குமார் (வயது 74). இவருடைய தம்பி சரவணன் (70) சற்று மனநிலை பாதித்தவர். இவர்களின் தங்கை மகள்கள் ஜெயபிரியா, கீதா. இவர்கள் 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பாலசுப்பிரமணிய குமாருக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது.

இதையொட்டி அவரை சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சரவணன் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள இறந்தவர்களை குளிர்பதன பெட்டியில் வைக்கும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு போன் செய்து உறவினர் ஒருவர் இறந்து விட்டார் எனவே குளிர்பதன பெட்டி (பிரீசர் பாக்ஸ்) வேண்டுமென்று அவரது முகவரியை தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் சரவணன் வீட்டிற்கு சம்பந்தப்பட்ட ஊழியர்கள் இறந்தவர்களின் உடலை வைக்கக்கூடிய ஒரு குளிர்பதன பெட்டியை கொண்டு வந்தனர். அப்போது அங்கு இறந்தவரின் உடல் இல்லாததை கண்டு அங்கிருந்த சரவணனிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் இறந்து போனவரின் உடல் ஆஸ்பத்திரியில் உள்ளது. எனவே நீங்கள் குளிர்பதன பெட்டியை இங்கே வைத்து விட்டு செல்லுங்கள். நாளை மதியம் வந்து எடுத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து ஊழியர்கள் குளிர்பதன பெட்டியை அங்கு இறக்கி வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் ஊழியர்கள் குளிர் சாதன பெட்டியை எடுக்க சரவணன் வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர்கள் வைத்து சென்ற குளிர்பதனப்பெட்டியில் பாலசுப்பிரமணிய குமார் நடுங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சரவணனிடம் உயிருடன் உள்ளவரை எதற்காக குளிர்பதனப் பெட்டியில் வைத்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் எனது அண்ணன் இறந்து விட்டார். ஆனால் அவரது ஆன்மா பிரியவேண்டும் அதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் குளிர்பதன பெட்டியில் வைத்துள்ள முதியவரை மீட்க முயன்றனர். ஆனால் சரவணன் அவர்களை தடுத்து விட்டார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதிராஜா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் நடுங்கி கொண்டிருந்த முதியவரை மீட்க முயன்றனர்.

அப்போது போலீசாரையும் சரவணன் தடுத்தார். உடனே போலீசார் குளிர்பதனப்பெட்டியில் நடுங்கி கொண்டிருந்த பாலசுப்பிரமணிய குமாரை அதிரடியாக மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதியவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:-

தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முதியவரை நேற்று நள்ளிரவு வீட்டிற்கு அழைத்து வந்து உள்ளனர். பின்னர் அதிகாலையில் அவரை குளிர்பதன பெட்டியில் வைத்து உள்ளனர். சுமார் 12 மணி நேரம் அவர் குளிர்பதன பெட்டியில் நடுங்கிக்கொண்டு இருந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. அவருக்கு திருமணம் ஆகவில்லை.

சரவணன் சற்று மனநிலை பாதித்தவர் என்பது தெரிய வருகிறது. இதனால் அவர் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளார் என்பதும் தெரிய வருகிறது. இருப்பினும் தொடர்ந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

உயிருடன் உள்ள அண்ணனை இறந்துவிட்டதாக கூறி அவரது தம்பியே குளிர்பதன பெட்டியில் வைத்த சம்பவம் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.