ஈஸ்டர் சந்தேக நபர் விடுதலையும் 2/3 பெரும்பான்மைக்கான முடிச்சுகளும்!

342 0

0 மைத்திரி, ரணில் அதிகாரிகள் ஆளுக்காள் அதிரடி குற்றச்சாட்டு

0 ரிஷாட் தம்பி விடுதலைக்கும் 20 க்கும் முடிச்சு போடப்படுகிறது

0 பேராயருக்கும் சந்தேகம்! கடும் போக்காளர்கள் அரசு மீது சீற்றம்

0 ஹக்கீம், ரிஷார்ட் வந்தால் உதைத்து விரட்டியடித்து விடுவோம்; – ஒரு எச்சரிக்கை

0 அரசு ஆடைகள் அணிந்து கொண்டா மக்கள் முன் நிற்கின்றது? – பிக்கு கேள்வி

னித வாழ்வு மிகவும் விநோதமனது. அவர்களின் சிலரது வாழ்வு துயரங்கள் நிறைந்து. இன்னும் சிலரது வாழ்வு செல்வச் செழிப்பானது. இன்னும் சிலரது வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது. அது போன்றுதான் அரசியலை எடுத்துக் கொண்டாலும் ஏற்றங்கள் இறக்கங்கள் கொந்தளிப்புக்கள் சர்ச்சைகள் மிக்கதாவும் அமைந்திருப்பதை நாம் பார்த்து வருகின்றோம்.

சுதந்திரத்தின் பின்னர் இந்த நாட்டில் கட்சிகளின் வரலாற்றைப் பற்றிப் பார்க்கின்ற போது இதுவரை செல்வாக்குடன் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் வங்குரோத்து நிலைக்கு தற்போது இலக்காகி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. அதற்குப் பதிலாக புதிய இரு அரசியல் இயக்கங்கள் செல்வாக்குச் செழுத்தத் துவங்கி இருக்கின்றன. ராஜபக்ஸாக்கள் தலைமையிலான அணியும் சஜித் தலைமையிலான அணியும் இன்று அரசியல் ரீதியில் செல்வாக்குப் பெற்று ஆட்சியாளர்களாகவும் எதிராணியிலுள்ளவர்களாகவும் இருந்து கொண்டிருக்கின்றன. தேசிய மட்டத்தில் ஜேவிபி ஏதோ வகையில் மக்கள் மத்தியில் கருத்தியல் ரீதியில் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருக்கின்றது.

தமிழ் தரப்புக்கள் தனது சமூகம் சார்ந்த அரசியிலில் ஆர்வமாக இருக்கின்றார்கள். இதில்தான் அவர்களது அரசியல் இருப்புத் தங்கி இருக்கின்றது. முஸ்லிம் தனித்துவ அரசியல் கட்சிகள் வழக்கம் போல் தனது சந்தர்ப்பவாத அரசியல் இருப்புக்கான மார்க்கங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றன. இப்போது ஈஸ்டர் தாக்குதலுக்கும் மூன்றில் இரண்டுக்கும் முடிச்சு என்ற நமது தலைப்புக்கு வருவோம். நமது அரசியலில் பல பிரச்சினைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடவை அல்லது தொடர்பு படுத்தப்படுகின்றது.

20 இல் வெல்வதற்கான உபாயங்கள்

அதே போன்றுதான் இப்போது அரசு முன்வைத்துள்ள 20 தொடர்பாக அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுகின்றது. அந்த மூன்றில் இரண்டை அடைந்து கொள்வதற்கு ஆளும் தரப்பு முனைகின்ற அதேவேளை அதனை வீழ்த்துவதற்கு எதிரணி தன்னலான அனைத்து முயற்ச்சிகளையும் செய்து கொண்டிருக்கின்றது. இதில் அரசு தோற்றால் அவர்களுக்கு மிகப் பெரிய அவமானம் குறிப்பாக ஜனாதிபதிக்கு பெரும் பின்னடைவு. ஏதிரணிகள் இதில் தோற்றாலும் அவர்களுக்கும் பெரும் சேதம் இல்லை. ஆனால் அவர்கள் இதில் வெற்றி பெற்றால் வெள்ளத்தில் ஆள்ளுண்டு போகின்றவனுக்கு துரும்பு கிடைத்த நிலை.

ஈஸ்டர் தாக்குதலையும் கடும் போக்கு இனவாதிகளையும் தமக்கு நல்ல வாய்ப்பாக பாவித்துக் கொண்ட ராஜபக்ஸாக்கள் அதே ஈஸ்டராலும் இனவாதிகளாலும் இன்று பெரும் நெருக்கடிகளுக்கு இலக்காகி வருகின்றார்கள். இது சுவரில் எறிந்த பந்து திரும்வருவது போல் ஒரு நிலை. அது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

சிறுபான்மையினருக்கு எதிரான இனவாதிகளைத் தமது அரசியல் இருப்புக்காக ராஜபக்ஸாக்கள் தன்னுடன் இணைத்துக் கொண்டது என்ற விடயம் இன்று பலருக்கு மறந்து இருந்தாலும் அல்லது அச்சம் காரணமாக பேசுவதைப் தவிர்த்துக் கொண்டாலும் யதார்த்தம் அதுதான். இப்போது ஆட்சியாளர்களுக்கு குறிப்பாக ஜனாதிபதி ஜீ.ஆருக்கு அரசியல் ரீதியில் தனது பிடியை மேலும் இருக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது. எமது பார்வையில் அதில் நியாயங்களும் நியாயமற்ற விடயங்களும் இருக்கின்றன.

இதற்காக முன்வைக்கப்பட்டுள்ள 20 திருத்தத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றிக் கொள்வதில் ஆளும் தரப்புக்கு ஒரு சிறிய நெருக்கடி நிலை இருக்கின்றது என்பது எமது கணிப்பு. அந்த அச்சம் அரசுக்கும் இருக்கின்றது. காரணம் ஆளும் தரப்பிலுள்ள பலர் தனிப்பட்ட ரீதியில் இதற்கு உடன்படவில்லை. அவர்களின் வாய்க்கு இப்போது பூட்டு என்பதை நாம் கடந்த வாரம் சொல்லி இருந்தோம்.

நீதிமன்றம் சாதகமான பதிலைக் கொடுத்தாலும் மேலும் இதற்குத் தேவையான மூன்றில் இரண்டை பெற்றுக் கொள்ள முடியுமா என்ற அச்சம் அரசுக்கு குறிப்பாக ராஜபக்ஸாக்களுக்கு இருக்கின்றது. எல்லோரும் வாய்களை மூடிக்கொண்டிருந்தாலும் விஜேதாச, விமல், விதுர போன்றோர் பகிரங்கமாகவே தனது நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு கொடுத்திருக்கின்றார். 19 இல்லாமல் இருந்திருந்தால் இன்று இந்த அதிகாரமிக்க கதிரையில் கோடா அமர்ந்திருக்க முடியுமா என்று கேள்வி எழுப்புகின்றார் விஜேதாச ராஜபக்ஸா. அவருக்கு ஒரு கனதியான கபினட் அந்தஸ்துள்ள அமைச்சு கிடைத்திருந்தால் இப்படி அவர் பேசி இருப்பாரா என்றும் நாம் எண்ண வேண்டி இருக்கின்றது. சு.கட்சி என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்பதில் நிறையவே சந்தேகம். என்பது தெரிந்ததே.

உள்வாங்குவதில் நெருக்கடி

எனவே ராஜபக்ஸாக்கள் மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர்கள் தனக்குத் துணைக்குத் தேடுகின்ற வேட்டை தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. அது பற்றிய பல தகவல்களை நாம் முன்பும் சொல்லி இருக்கின்றோம். எதிரனியில் உள்ள சிலர் அரசுக்கு ஆதரவு கொடுத்து அதற்கு மாற்றீடாக பதவிகளை எதிர் பார்க்கின்றனர். அதிலும் ஏறக்குறைய உடன்பாடுகள் முடிந்திருக்கின்றன என்பது நமக்குக்கிடைக்கின்ற தகவல்கள் உறுதி செய்திருக்கின்றன. இதில் கனிசமான சிறுபான்மை உறுப்பினர்கள் குறிப்பாக முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதில் ஹக்கீம், ரிஷாட் பேன்றவர்களின் பெயர்களும் உச்சரிக்கப்படுக்கின்றது. மு.க. செயலாளர் காரியப்பர் கூட இதனை சுசகமாக கடந்த வாரம் சொல்லி இருந்தார். ரிஷாடும் நாம் 20 பற்றி இன்னும் தீர்மானங்களை எடுக்கவில்லை என்று கூறி இருந்தார்.

இந்தப் பின்னணியில்தான் புதிய சர்ச்சை தோன்றி இருக்கின்றது. நாம் மேற்சொன்ன இரு தலைவர்களும் தாவலுக்குத் தயாராக இருந்தாலும் அவர்களை உள்வாங்கிக் கொள்வதில் ஆளும் தரப்புக்கு பெரும் நெருக்கடி நிலை. இவர்களுக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டியே மொட்டுக்கள் அணி இந்த பெரிய வெற்றியைப் பெற்றுக் கொண்டு பதவிக்கு வந்தது. எனவே ஒரு கட்டத்தில் அமைச்சர் கெஹெல்லிய அவர்கள் 20க்கு வாக்களிக்க முன்வந்தால் நாம் அதனை ஏற்றுக் கொள்வோம் அது அவர்களுடைய வேலை என்று சொல்லி இருந்தார். ஏதேனும் கொடுக்கல் வாங்கல் இல்லாமல் அவர்கள் வாக்களிப்பார்களா என்று கடும் போக்காளர்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.

ரிஷாட் தம்பியின் விடுதலை

இந்த இடத்தில்தான் ரிஷாட் தம்பி விடுதலைக்கும் 20 க்கும் முடிச்சு போடப்படுகிறது. நீதி மன்றம் அவர்க்கு வழக்குப் போடக்கூடிய குற்றச்சாட்டுக்கள் எதுவுமே இல்லை என்று சொல்லி கைவிரித்து விட்டது. அதனால் அவருக்கு இப்போது விடுதலை. கடும் போக்காளர்கள் எதிரணி அரசியல்வாதிகளும் இது பற்றி இப்போது அரசாங்கத்தை நேரடியாகக் குற்றம் சாட்டுகின்றார்கள்.

அரசுக்கு மூன்றில் இரண்டுக்கு துணை தேவை என்று எதிர்பார்க்கப்படும் இந்தப் பின்னணியில் ரியாஸ் விடுதலை ரிஷாட் தரப்புக்கு வழங்ப்பட்ட இலஞ்சம் என்று இந்தத் தீர்ப்பு மீது கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. எனவே இதில் நமக்குள்ள கேள்வி என்னவென்றால் இந்த நாட்டில் நீதித்துறை சுயமாக இல்லை என்ற கருத்து? மறுபுறத்தில் நீதிதுறை நியாயமாக விசாரித்து அவரை விடுதலை செய்திருந்தாலும் இந்த அரசியல்வாதிகளும் கடும் போக்காளார்களும் அதனை ஏற்றுக் கொள்ளத்தயாராக இல்லை என்பது. எனவே காட்டுச் சட்டம்தான் இன்று நாட்டில் இருக்கின்றது அல்லது தேவைப்படுகின்றது என்று நினைக்கத் தோன்றுகின்றது.

ரிஷாட் தம்பி விடுதலையை விமர்சிக்கும் ஆனந்த முறுத்தெட்டுவே தேரர் அரசாங்க ஆடைகளை ஆணிந்து கொண்டா மக்கள் முன் பேசுகின்றது என்று கடும் தொனியில் கேள்வி எழுப்பி இருக்கின்றார். விமல் வீரவன்ச ஹக்கீம் ரிஷாட் அரசுடன் இணைய வந்தால் உதைத்துத் துரத்தி விடுவோம் என்று கேவலமாகப் பேசி இருக்கின்றார்.

நிசந்த ரணசிங்ஹ என்ற பாராளுமன்ற உறுப்பினர் இவர்களை உள்வாங்குகின்ற அரசங்கத்தில் நான் ஒருபோது அங்கத்தத்தவராக இருக்க மாட்டேன் என்று அடித்துக் கூறி வருகின்றார். இவரது நிலைப்பாட்டில் பல உறுப்பினர்கள் கருத்துச் சொல்லி வருகின்றார்கள். ஜனாதிபதி கூட அதற்கு வாய்ப்பு இல்லை அவர்களை நாம் அவர்களை எம்முடன் சேர்த்தக் கொள்ள மாட்டோம் என்று இதற்கு பதில் கொடுத்திருக்கின்றார். எனவே மூன்னிறில் இரண்டு எதிர் பார்ப்புக்கு இருவாக்குகள் (ஹக்கீம், ரிஷாட்) மேலும் குறைவடைகின்றது.

பேராயர் ஒரு அறிவுபூர்மான மனிதன் அவர்கூட இந்த தீர்ப்பைக் கடும் தொனியில் விமர்சிக்கின்றார் அவரும் ரிஷாட் தம்பி விடுதலைக்கும் எதாவது டீல் இருக்கலாம் என்ற சந்தேகம் தனக்கும் இருப்பதாக சொல்லி வருகின்றார். சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் மீது தனக்கு விசுவாசம் இருக்கின்றது என்று பேராயர் பேசி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. எனவே நீதித்துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் டீல் இருக்கின்ற என்ற கருத்து மேலும் வழுவடைக்கின்றது. அப்படியானால் ஆட்சியாளர்களுக்கு ஏற்றவாறு நாட்டில் நீதி நெளிந்து வலைந்து கொடுக்கின்றது என்றுதான் அர்த்தம்.

வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்ப்பிலும் நீத்துறைக்கும் அரசியலுக்கும் கொடுக்கல்வாங்கள் இருந்திருக்கலாம் என்று நாம் இப்போது சந்தேகம் எழுப்பினால் அதில் என்ன தவறு இருக்க முடியும்?

மேலும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலும் அரசியல் நோக்கங்களுக்காவும் கடும் போக்காளர்களைத் திருப்தி செய்து அரசியல் இலாபங்களை அடைந்து கொள்வதற்காகவும் குற்றச்சாட்டுக்கள் கைதுகள் நடந்திருக்க நிறையவே வாய்ப்புக்கள் இருக்கலாம் என்று நாம் யோசிக்கலாம். நீதி மன்றம் என்னதான் தீர்ப்பை வழங்கி இருந்தாலும் சிலரது அரசியல் இருப்பு விருப்புக் காரணமாக ரிஷாட் போன்றவர்களைக் குற்றவாலியாக தொடர்ந்தும் வைத்திருக்கவும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

கோட்டாவின் அறிக்கை எதற்காக?

நீதி மன்றம் ரிஷாட் தம்பி ரியாஸ் குற்றவாளியல்ல என்று அவரை விடுதலை செய்த பின்னர் ஜனாதிபதி ஜீ.ஆர். நாங்கள் ரிஷாடுடன் எந்த அரசியல் உறவுகளையும் மேற் கொள்ளமாட்டோம் என்று மக்களுக்கு செய்தி சொல்வதன் மூலம் அவர் கூட நீதிமன்ற மற்றும் பொலிஸ் தரப்பு நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்றுதானே பொருள்படும். மறு பக்கத்தில் உண்மையிலே ரிஷாட் தம்பி தாக்குதல் தொடர்ப்பில் குற்றம் புரியாமல் பழியை அவர் மேல் போடுவதன் மூலம் அவர் சமூகத்தின் மத்தில் பெரும் நெருக்கடிக்கு ஆளாக்கப்படுக்கின்றார்.

சில தினங்களுக்கு முன்னர் இது தொடர்பாக கேள்வி நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட போது துறைக்குப் பொறுப்பான அமைச்சர் சமல் ராஜபக்ஸ பொலிஸ் மற்றும் புலனாய்வுத்துறையினர் கொடுத்த அறிக்கைகளின் படி சந்தேக நபர் மீது வழக்குத் தொடுக்க எந்த ஆதரங்களும் இல்லாத நிலையில் தான் விடுதலை நடந்திருக்கின்றது என்று பதில் கொடுத்திருக்கின்றார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அன்று இந்த சந்தேக நபரைக் குற்றவாளி என்று பகிரங்கமாக ஊடகங்கள் முன் பேசிவிட்டு இன்று அவரே ரிஷாட் தம்பி ரியாஸ் சுற்றவாளி என்று சொல்கின்றாரே என்று கேட்ட போது அந்த பொலிஸ் அதிகாரியும் அரசியல்வாதிகள் போல் பேசி இருக்கின்றார்.

அவர் ஒரு சந்தேக நபர் என்ற தோரனையில் அன்று கருத்துச் சொல்லி இருந்தால் இந்த விடுதலை இன்று ஒரு பிரச்சினையாகி இருக்க மாட்டாது என்கின்றார் அமைச்சர் சமல் ராஜபக்ஸா. ஒரு சந்தேக நபரை மூன்றுநாள் தடுத்து விசாரணை செய்ய முடியும். ஆனால் இந்த சந்தேக நபரை விஷேட விதியின் கீழ் மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை நடந்திருக்கின்றது. அப்படி விஷேட தடுப்பு வைப்புக்கு இவர் மூன்று முறை அதாவது ஒன்பது மாதங்கள் தடுத்து வைத்து விசாரித்தில் அவர் மீது இந்த ஈஸ்டர் தாக்குதலுக்குத் எந்தத் தொடர்புகளும் இல்லை என்பதால் இன்று அவருக்கு விடுதலை. முன்னுக்குப் பின் கருத்துக்களை வெளியிட்டார் என்ற காரணத்தால் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் அந்த இடத்துக்கு அஜித் ரோஹன நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவர் இந்தப் பதவியை ஓரளவுக்கு கடந்த காலங்களில் சிறப்பாக செய்து வந்திருக்கின்றார் என்று அவதானிக்க முடிந்தது.

இம்சாம் என்ற குண்டுதாரிக்கும் சந்தே நபருக்கும் வர்த்தகம் தொடர்பான அமைச்சு மட்ட பேச்சுவார்த்தைகளே தாக்குதலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் நடந்திருக்கின்றது. என்று பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் கூறியதுடன் விடுதலையானாலும் மேலும் இதுபற்றிய தேடல்கள் தொடரும் என்று அவர் சமாளித்திருக்கின்றார். தாக்குதல் தாரிகள் மஹிந்த காலத்தில் அவர் கையாள் ஒரு காலத்தில் வர்த்தகம் தொடர்பாக விருதும் வாங்கி இருந்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க ஈஸ்டர் தாக்குதல் தொடர்ப்பில் அந்தக் கமிஷன் முன் ஸ்கைப் மூலம் டுபாயியில் இருந்து சாட்சி வழங்குக்கின்ற போது சஹ்ரான் ஒரு முறை இந்தியாவுக்கு தப்பியே ரிஷாட் தம்பி ரியாஸ்தான் உதவி இருந்தார் என்றும் சாட்சி வழங்கி இருக்கின்றார். இது ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் காத்தான்குடியில் நடந்த மற்றுமொரு ஒரு தாக்குதல் தொடர்பாக சஹ்ரான தேடப்பட்ட போது நடந்த விவகாரம் என்று எமக்குத் தெரிந்த தகவல்கள் அறியத் தருகின்றது. ஆனால் சஹரான் இந்திய தப்ப ரியாஸ் தொடர்பு பற்றி எமக்குத் தெரியாது. ஆனாலும் மகேஷ் சேநாயக்க நாம் இதுபற்றி முன்பு அறிவித்திருந்தோம் என்று அடித்துக் கூறுகின்றார்.

புதிய குற்றச்சாட்டுக்கள்

ரிஷாட் தம்பி தொடர்பான வழக்கு இப்படி முடிவுற்றிருக்கும் நிலையிலும் இதில் மேலும் பல நெருக்குதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சாதகமான அறிக்கைகள் கொடுபடவில்லை என்ற கருத்தில் புலனாய்வுத்துறை மற்றும் அது தொடர்பான வைத்திய அதிகாரிகள் மீது இப்போது புதிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுக்கின்றது. எனவே புதியவர்களை வைத்து மீண்டும் விசாரணைகள் துவங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது தொடர்பான விசாரணை ஆனைக்குழு முன் மைத்திரி ரணில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆளுக்கால் அதிரடி குற்றச்சாட்டுகளை ஒருவர் மீது ஒருவர் சாடிக் கொள்கின்றார்கள்.

ஆனால் இந்தப் படுகொலையுடன் நேரடியாகத் தொடர்புடைய பலர் இன்னும் தடுப்புக் காவலில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு நிச்சயம் மிகக் கடுமையான தண்டணைகளுக்கு நிறையவே வாய்ப்பு இருக்கின்றது. இதற்குப் பயிற்சி வழங்கியவர்கள் ஆயுதப் பயிற்ச்சி பெற்றவர்கள். ஆனுசரணை வழங்கியோர் ஆயுள்பூராவும் கம்பி எண்ண வேண்டி இருக்கும் என்று நாம் நம்புக்கின்றோம். அப்படி தண்டனைகள் கிடைக்கின்ற போது கடும் போக்காளர்களுக்கு ஒரு மகிழச்சி கிடைக்கும். ஆனால் மூன்றில் இரண்டை அரசு எதிர்பார்க்கின்ற இந்த நேரத்தில், ரிஷாட் தம்பி விடுதலைதான் இன்று அரசியல் வட்டங்களில் பேசுபொருள்.

  • நஜீப் பின் கபூர்