நினைவுகூரும் அடிப்படை உரிமையை மறுத்தால் போராட்டம்; தமிழ்க் கட்சிகளின் கூட்ட முடிவு குறித்து சுரேஷ்

342 0

“30 வருடகால போராட்டத்தில் உயிரிழந்த தமிழ் மக்களையும், போராளிகளையும் நினைவு கூருவது தமிழ் மக்களின் கடமையும், உரிமையுமாகும். அதற்குத் தடை விதிப்பது தமிழர்களின் உரிமைகளை மறுதலிப்பதாகும். எனவே அரசு இந்தத் தடைகளை அகற்றவேண்டும். இதற்கான, கோரிக்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கு பதிலளிக்கவேண்டும். பதிலளிக்க தவறினால் தமிழர் தாயகத்தில் அரசின் செயற்பாடுகளை கண்டித்து தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன்.

திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை விதிக்கப்பட்டமை, சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட அரசின் ஜனநாயக மறுப்புச் செயற்பாடுகளைக் கண்டிப்பதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஜனநாயகப் போராளிகள், தமிழ்த்தேசிய பசுமை இயக்கம் ஆகிய தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் இணைந்து நேற்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தின.

இந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே சுரேஷ் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

“தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள்,போராளிகள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அவர்களை அஞ்சலிப்பதும் நினைவு கூருவதும் ஒவ்வொரு தமிழ் மக்களினதும் உரிமையும் கடமையுமாகும். அதற்கு எதிராகத் தடைபோடுவது தமிழர்களின் உரிமையை மறுதலிப்பதாகவே அமையும். எனவே அரசின் இத்தகைய நடவடிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் நிராகரிக்கின்றது. ஜனாதிபதி மற்றும் அரசு இவ்வாறான தடை உத்தரவுகளை நீக்கவேண்டும்.

திலீபனுக்கு மட்டுமல்லாமல் போராளிகளையும், பொதுமக்களையும் நினைவு கூருவது எங்கள் கடமையும் உரிமையுமாகும். அதனைப் பயங்கரவாதம் எனக் கூறி தடை செய்வது ஏற்புடையதல்ல. இங்கு இடம்பெற்ற கூட்டத்தில் சில தீர்மானங்களை எட்டியிருக்கின்றோம். பிரதானமாக தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக நினைவேந்தல்களுக்கு விதிக்கப்படும் தடைகள் நீக்கப்படவேண்டும்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கக்கூடாது என வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதவுள்ளோம். அதற்கு எமக்கு பதில் வழங்கப்படவேண்டும். அரசாங்கம் இதனை செய்யுமா? செய்யாதா? என்பதற்கு அப்பால் எமக்குப் பொருத்தமான பதில் வழங்கப்படவேண்டும். பதில் வழங்காவிட்டால் அல்லது இந்த விடயத்தில் பொறுப்பான பதில் வழங்கப்படாவிட்டால் தமிழர் தாயகத்தில் அரசின் செயற்பாடுகளைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். அந்த வழிக்குள் எங்களை அரசே தள்ளுகின்றது. அதனை நாங்கள் வெளிநாட்டுத் தூதுவராலயங்களுக்கும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கும் எடுத்துச் சொல்லுவோம்” என்றார்