இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்களுக்கான அறிவித்தல்

358 0

இலங்கையில் சிக்கியிருந்த குழந்தை ஒன்று உட்பட 154 இந்திய பிரஜைகள் விசேட ஏர் இந்தியா விமானம் (AI 1284) மூலமாக நேற்று (17) கொழும்பிலிருந்து பெங்களூரு மற்றும் புதுடில்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

கொவிட்19 காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் உலகளவில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான, இந்திய அரசின் “வந்தே பாரத் மிஷன்” திட்டத்தினுடைய ஓர் அங்கமாக இந்த விமானப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஏர் இந்தியா, தனியார் மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள், வாடகை விமானங்கள், கப்பல் சேவைகள் மற்றும் தரை மார்க்கமான சேவைகள் உட்பட பல்வேறு வழிகளூடான உலகளாவிய பயணச் சேவைகளின் காரணமாக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 1.3 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் இதுவரையில் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் ஆறாம் கட்ட நடவடிக்கைகள் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

கொவிட் 19 காரணமாக சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த இந்திய பிரஜைகள், சொந்தநாடு நோக்கிய தமது பயணம் குறித்து மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்தனர். கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு மேற்கொள்ளப்பட்ட கப்பற் சேவை, எட்டு விசேட ஏர் இந்திய விமான சேவைகள், ஏனைய பல விசேட விமான சேவைகள் மற்றும் இன்றைய விமான சேவை உட்பட்ட சேவைகள் மூலமாக 2000 க்கும் அதிகமான இந்திய பிரஜைகள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்த விமானத்திற்கான பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அவசரமாக நாடு திரும்ப வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக நிர்க்கதியாகியுள்ள குடிபெயர் தொழிலாளர்கள், விசா காலாவதியான நிலையில் தங்கியிருப்பவர்கள், மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர், கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள், குடும்ப உறுப்பினரின் மரணத்தை தொடர்ந்து உடனடியாக இந்தியா திரும்புவதற்கு கோரிக்கைகளை முன் வைத்திருப்போர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு வெளிநாடுகளில் சிக்குண்டிருப்பவர்களுக்காக இந்திய உள்துறை அமைச்சினால் வெளியிடப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட செயற்பாட்டுமுறைமையின் பிரகாரம், முன்னுரிமை வழங்கப்படும்.

நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் இதுவரையில் தம்மை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்ய தவறியிருப்பின் கீழ்வரும் இணையத்தளத்தில் பதிவு செய்யுமாறு கோரப்படுகிறார்கள் https://hcicolombo.gov.in/COVID_helpline நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய பிரஜைகள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் அறிவித்தல்களை அறிந்து கொள்ளவும்.