காணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனடா பிரதமர் தலையிடவேண்டும்- தமிழ் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள்

270 0

இலங்கையில் காணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலையிடவேண்டும் என கனடாவில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இறைமையுள்ள நாடு அல்லது அதன் தலைவருக்கு எதிராக இன்னொரு நாட்டில் நீதிமன்ற நடவடிக்கையை எடுப்பதை தடுக்கும் விடுபாட்டுரிமையை கனடா பிரதமர் நீக்கவேண்டும் என தமிழ் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவ்வாறான நடவடிக்கை இலங்கையில் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் தங்கள் குடும்பத்தவர்களுக்காக நீதியை கோருவதற்கு உதவும் என ஒட்டாவாவை சேர்ந்த தமிழ் செயற்பாட்டாளர் குமணண் குணரட்ணம் செய்தியாளர் மாநாட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது மனிதர்கள் அனைவரினதும் ஆழ்ந்த கரிசனைக்குரிய விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறைமையுள்ள நாடு ஒன்றிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் விடுபாட்டுரிமையை இரத்துச்செய்யவேண்டும் என தெரிவித்துள்ள அவர் வர்த்தக பரிமாற்றங்களுக்காக அதனை அகற்றமுடியுமென்றால் ஏன் சர்வதேச குற்றங்களுக்கு அதனை நீக்கமுடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுபாட்டுரிமையை நீக்கும் சட்டமூலம் தமிழர்களுக்கு மாத்திரமல்ல சர்வதேச அளவில் காணாமல் போகச்செய்யப்பட்டமையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவியாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.