திலீபன் உட்பட தியாகிகளை நினைவுகூருவதற்கு அனுமதிக்க வேண்டும்- இராதாகிருஷ்ணன்

247 0

தியாகி திலீபன் உட்பட தியாகிகளை நினைவு கூருவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதே மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பாடாகும் என முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் புதிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் விஜயச்சந்திரன் இன்று (புதன்கிழமை) தமது கடமைகளைப்பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “தனது இனத்துக்காகவும், சமூகத்துக்காகவுமே திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இருந்தும் அவரை கொச்சைப்படுத்தும் விதத்தில் பாதுகாப்புச் செயலாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.

திலீபனை நாம் வீரனாகவே கருதுகின்றோம். அவருக்கான நினைவு தினத்தைக்கூட அரசாங்கம் தடைசெய்துள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தியாகிகளுக்கு நினைகூரல் நிகழ்வுகளை நடத்தும் வாய்ப்பு வழங்கப்படவேண்டும்.

இதேவேளை, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆளுங்கட்சி சார்பில் பொறுப்புக் கூறுவதற்கு எவரும் இல்லை. அது இன்னும் திருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே, நாடாளுமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே அதுகுறித்து மேலதிக தகவல்களை வழங்கலாம். எது எப்படியிருந்தாலும் மக்களுக்குப் பாதிப்பாக அமையும் எந்தவொரு விடயமாக இருந்தாலும் அதனை நாம் எதிர்ப்போம்” என்றார்.