அம்பாறையில் விசேட அதிரடிப்படையின் மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து

333 0

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது விசேட அதிரடிப்படையின் (STF) மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.

பகல்,இரவு வேளைகளில் வீதிகளில் செல்லும் சந்தேகத்திற்கு இடமானவர்கள், வாகனங்களை இடைமறித்து சோதனை செய்து பாதுகாப்பினை குறித்த பிரதேசத்தத்தில் உறுதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா அனர்த்தத்தின் பின்னர் மாவட்டத்தில் இடம்பெற்று வரும் கொள்ளைகள், கஞ்சா கடத்தல்கள், அனுமதி பத்திரமின்றி மணல் அகழ்வு, மாடுகள் சட்டவிரோதமாக கடத்தல், போன்ற சம்பவங்களை முறியடிப்பதற்காக இவ்ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தவிர MT NEW DIAMOND கப்பலின் பராமரிப்பிற்காக அம்பாறை பகுதிக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு நிபுணர்களின் பாதுகாப்பு விடயங்கள் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தும் முகமாக இவ்மோட்டார் சைக்களிள் படையணி இந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இம் மோட்டார் சைக்கிள் படையணியானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர் சேனாதீரவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட கட்டளை அதிகாரி கே.ஜி நளீன் பேரேரா வழிகாட்டலில் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை மோட்டார் சைக்கிள் படையணியின் தலைமையதிகாரி பொலிஸ் பரிசோதகர் தென்னகோன் தலைமையில் ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை ,கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை அட்டாளைச்சேனை ,அக்கரைப்பற்று, ஆகிய பகுதிகளில் மேற்குறித்த மோட்டார் சைக்கிள் படையணியின் ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.