குருநாகல் நகர முதல்வர் உள்ளிட்ட 5 பேரை கைதுசெய்வதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணையை அமுல்படுத்துவதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இத்தடையானது மனுமீதான விசாரணை நிறைவடையும் வரை செல்லுபடியாகுமென நீதியசரகள் குழு வலியுறுத்தியுள்ளது.
குருநாகல் நகர மத்தியில் அமைந்துள்ள மன்னர் காலத்திற்குரியதென கூறப்படுகின்ற அரச கட்டடத்தை அகற்றிய சம்பவம் தொடர்பாகவே குருநாகல் முதல்வர் துஷார சஞ்சிவ விதாரண உள்ளிட்ட 5 பேரை கைதுசெய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இக்கட்டிடம் தொல்பொருள் தொன்மை வாய்ந்ததாக தொல்பொருள் சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லையென நகர முதல்வர் உட்பட 5 பேரும் தெரிவித்திருந்தனர்.
இதற்கமைய சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் தனக்கு எதிராக தொல்பொருள் சட்டமூலத்தின் கீழ் குருநாகல் நீதவான் நீதிமன்றத்திற்கு விளக்கமளித்து கைதுசெய்வதற்காக பிடியாணை பெறப்பட்ட செயற்பாட்டில் பல்வேறு குளறுபடிகள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விடயங்களை கருத்திற்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை அமுல்படுத்தப்படுதவதை தடை செய்யும் வகையில் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்தது.
எனினும் இவ்வுத்தரவின் மூலம் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸாருக்கோ, நீதிமன்றின் செயற்பாட்டுக்கோ எவ்வித தடையுமில்லையென நீதியரசர்கள் வலியுறுத்தினர்.
மனுதாரருக்கு இன்றைய தினத்திலோ அல்லது நாளையே குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்த நீதியரசர்கள் குழு அவரை விளக்கமறியலில் வைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் உத்தரவிட்டது.
மனுதாரர்களுக்கு எதிரான குற்றங்கள் பிடியாணையின்றி கைதுசெய்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரங்கள் காணப்படுகின்றமை தவறான விடயங்கள் என்பதால் நீதவான் ஏன், பிடியாணை பிறப்பித்தார் என்பது பிரச்சினைக்குரிய விடயமென மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தலைமை நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்குவதாக தெரிவித்த நீதிபதி மனு மீதான விசாரணையை செப்டம்பர் 14 ம் திகதிவைரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

