நல்லூர் தேர் உற்சவத்திற்கு வரும் பக்தர்களுக்கான அறிவித்தல்

277 0

தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு நல்லூர் தேர் உற்சவத்திற்கு அடியவர்கள் அதிகளவில் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாளை மறுதினம் (17) நல்லூர் ஆலய தேர் உற்சவம் மிகவும் விமரிசையாக இடம்பெறவுள்ள நிலையில் தற்போது உள்ள கொரோனா நிலைமையினை கருத்திற் கொண்டு மக்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா மிக விமரிசையாக நடைபெற்று வருகின்றது. தேரோட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. தீர்த்தோற்சவம் மறுநாள் 18ம் திகதி இடம்பெறவிருக்கின்றது.

இந்த நிலையில் தற்பொழுது பக்தர்கள் அதிகளவில் நல்லூர் கந்தனை தரிசிப்பதற்கு வருகை தருவதனை நாங்கள் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

ஏற்கனவே சுகாதாரப் பகுதியினர் அதேபோன்று பொலிசார் மற்றும் பாதுகாப்பு பிரிவினரும் ஆலய நிர்வாகத்தினரும் சுகாதார அறிவுறுத்தல்களை பக்தர்களுக்கு வழங்கியிருக்கின்றார்கள். அந்த அடிப்படையிலே சுகாதார நடைமுறைகளை பேணி சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் சகல உற்சவங்களில் கலந்து கொள்வதற்கு ஏற்றவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நல்லூர் கந்தனுடைய திருவிழா என்றால் லட்சோப லட்சம் மக்கள் ஒன்று கூடி நிற்கின்ற இடம் ஆகவே இந்த கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு பக்தர்கள் இந்த சூழ்நிலையை அனுசரித்து செயற்படுத்த வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது.

இந்த வருட நல்லூர் கந்தன் ஆலய திருவிழாவில் சுகாதார நடைமுறைகளை சமூக இடைவெளியை பின்பற்றி ஆலய உற்சவங்களில் கலந்து கொள்ளுமாறு ஏற்கனவே பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆலயத் தேர் உற்சவத்தினை உலகளாவிய ரீதியில் தொலைக்காட்சி வழியாக முடிகளில் இருந்தவாறே ஆலய உற்சவத்தினை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

சமூகத்தில் ஒவ்வொருவருடைய தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு பக்தர்களும் இந்த இந்த தடவை நல்லூர் ஆலய தேர் உற்சவத்திற்கு ஒன்று கூடி ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ளாது சுகாதார ஏற்பாடுகளுக்கு ஏற்ப அனுசரித்து தங்களுடைய பிரசன்னத்தை குறைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.

கூடுமானவரை நீங்கள் வீடுகளிலிருந்து ஆலயத் தேர் உற்சவத்தின் கண்டுகளிக்க முடியும் எனவே பக்தர்கள் இந்த விடயத்தினை கருத்தில் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் நாங்கள் யாழ் மாவட்டத்தில் கோரோணா சூழ்நிலையினை மிகவும் கட்டுப்படுத்தி மிகவும் உச்சபட்சமாக இதனைக் குறைத்து உங்களை பாதுகாத்துள்ளோம்.

இந்த சூழ்நிலையிலே சமூகத்தில் ஒவ்வொரு தனி மனிதனின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் முகமாக செயற்பட வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையாகும். எனவே இந்த தேர்த்திருவிழா உற்சவத்தில் பக்தர்கள் அதிகளவில் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.