வஸீம் தாஜுதீனின் மரணத்திற்கு நீதி கிடைக்குமென்ற நம்பிக்கையை இழந்துள்ளோம்- குடும்பத்தினர்

342 0

இலங்கையின் புகழ்பெற்ற றக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் மரணத்திற்கு நீதி கிடைக்குமென்ற நம்பிக்கையை இழந்திருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக வஸீம் தாஜுதீனின் சகோதரி அயேஷா தாஜுதீன், தனது முகப்புத்தகத்தில்  இவ்வாறு பதிவேற்றியுள்ளார்.

குறித்த பதிவில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “உங்களுடைய உடல் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு 5 வருடங்களாகின்றன. அந்த அனுபவம் எமது மனங்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

அத்துடன் புதைக்கப்பட்ட உங்களது உடலைத் தோண்டியெடுப்பது உங்களுடைய மரணத்திற்காக நீதியை நிலைநாட்டுவதற்கு ஓர் விஞ்ஞானபூர்வமான ஆதாரமாக அமையும் என்றுகூறி இதற்காக அம்மா, அப்பாவின் சம்மதத்தைப் பெறுவதற்கு நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம்.

இந்த உலகம் மிகவும் கொடூரமானது என்பதுடன், பெரிதாக எதனையும் எதிர்பார்ப்பதற்கில்லை. எம்மைப் பொறுத்தவரையில் அனைத்தும் நீங்கள்தான்.

ஆனால் இந்த உலகைப் பொறுத்தளவில் நீங்கள் வெறுமனே ‘மற்றொருவர்’. நீங்கள் எப்போதும் தீராத காயத்தை எமக்குள்ளே விதைத்துச் சென்றுவிட்டீர்கள்.

வஸீம் தாஜுதீனின் மரணத்திற்கு நியாயத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நாங்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளிலும் தோல்வியை சந்தித்து இன்று நின்றுகொண்டிருக்கின்றோம்.

அதாவது, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் உங்கள் இன்மையை நாங்கள் உணர்கின்றோம்” என  அயேஷா தாஜுதீன்  முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளார்.