அதிகாலையிலேயே சென்று வாக்களியுங்குமாறு யாழ். அரசாங்க அதிபர் வேண்டுகோள்!

265 0

வாக்காளர்கள் அதிகாலையிலேயே சென்று வாக்களிப்பினை மேற்கொள்ள வேண்டுமென  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாளை இடம்பெறவுள்ள தேர்தல் தொடர்பாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“நாளை நடைபெறவுள்ள தேர்தலுக்கான சகல பூர்வாங்க ஏற்பாடுகளும்  மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளன.

இன்று காலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகளும் சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களும் தேர்தல் மத்திய நிலையத்திலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 584 வாக்காளர்களும், கிளிநொச்சி நிர்வாக மட்டத்தில் 92 ஆயிரத்து 264 வாக்காளர்களும் மொத்தமாக யாழ் தேர்தல் மாவட்டத்தில் 5 லட்சத்து 71 ஆயிரத்து 848 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.

அதேபோன்று யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 508 வாக்களிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 107 வாக்களிப்பு நிலையமுமாக மொத்தமாக 615 வாக்களிப்பு நிலையங்கள்

யாழ் தேர்தல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று வாக்கெண்ணும் நிலையங்களை பொறுத்தவரையிலே சாதாரண வாக்கெண்ணும் நிலையங்களாக யாழில் 73 நிலையங்களும் கிளிநொச்சியில் 14  ஆக மொத்தமாக 103 வாக்கெண்ணும் சாதாரண நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் 16 தபால்மூல வாக்கு எண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. யாழ் தேர்தல் மாவட்டத்தில் மொத்தமாக 7 பேர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவுள்ளார்கள்.

அதற்காக 330 பேர் போட்டியிடுகிறார்கள் 19 அரசியல் கட்சிகளும் 14 சுயேச்சைக் குழுக்களை சேர்ந்த 33 கட்சிகளும்  போட்டியிடுகின்றன.

தேர்தல் கடமைகளுக்கென 8235 உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இந்த தடவை விசேடமாக சுமார் 450 உத்தியோகத்தர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கான பணியில் அமர்த்தியுள்ளோம்.

இந்த தேர்தலில் சுகாதார நடைமுறைகளையும் அதனுடைய வழிகாட்டல்களையும் பின்பற்றி மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு காணப்படுவதன் காரணமாக அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் அதற்குரிய ஏற்பாடுகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல் மாற்றுத்திறனாளிகள் அந்த இடத்திற்கு செல்வதற்குரிய ஏற்பாடுகளும் அந்தந்த வாக்களிப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை நேரகாலத்துடன் சென்று வாக்களிப்பினை மேற்கொள்ள வேண்டும். சுகாதார நடைமுறை மற்றும் சமூக இடைவெளியை பேணி முக கவசம் அணிந்து வாக்களிக்கமுடியும்.

யாழில் 30 பேர்  தனிமைப்படுத்தலில் உள்ளார்கள். அவர்களுக்குரிய வாக்களிக்கின்ற சந்தர்ப்பமும் இம்முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 26 வாக்களிப்பு நிலையங்களில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறையை பின்பற்றுவதற்காக மேலதிகமாக சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களும் சுகாதார உத்தியோகத்தர்களும் அங்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள் அல்லது பொதுச் சுகாதார பரிசோதகர் இந்த நடைமுறையினை செயல்படுத்தவுள்ளார்.

வாக்காளர்கள் எந்த பயமுமின்றி தங்களுடைய வாக்குரிமையை செயல்படுத்த முடியும். அதற்குரிய சுகாதார நடைமுறைகள் சம்பந்தமான விடயங்கள்  ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

5ஆம் திகதி வாக்களிப்பு முடிந்தவுடன் வாக்குப் பெட்டிகள் தேர்தல் மத்திய நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு 6ஆம் திகதி காலை 7 மணி அளவில் வாக்கெண்ணும் பணி  ஆரம்பிக்கப்படவுள்ளது.

நெடுந்தீவு பகுதி வாக்குப்பெட்டி வழமைபோன்று வான் மார்க்கமாக கொண்டு வருவதற்குரிய நடவடிக்கையினை தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

அதே போல ஏனைய தீவு பகுதிகளுக்கான வாக்குப் பெட்டிகளும் கடற்படையின் உதவியுடன் எடுத்து வருவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம்.

இந்த முறை தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன எனவே அனைத்து மக்களும் அதிகாலையிலேயே சென்று  வாக்களிக்களியுங்கள்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.