சிறிலங்கா ஜனாதிபதியால் அமைச்சர்களை பரிந்துரைக்க முடியாது – கிரியெல்ல

299 0

பொதுத்தேர்தலில் பின்னர் அமையும் அரசாங்கத்தின் கீழ் அமைச்சர்களை நியமிக்க பரிந்துரைக்கும் அதிகாரம் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இருக்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு இருக்கும் என அவர் தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு முன்னர் வழங்கப்பட்ட பல அதிகாரங்கள் பிரதமரிடம் பகிரப்பட்டுள்ளதாக கூறினார்.

கடந்த அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க முயன்றது, ஆனால் பின்னர் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைக் குறைக்க முடிவு எட்டப்பட்டது. அதன்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் 75 விகிதமான அதிகாரங்கள் இப்போது பிரதமரிடம் உள்ளன என்றும் குறிப்பிட்டார்.

ஆகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அமைச்சு பதவியை வைத்திருக்கும் அதிகாரம் கூட இருக்காது என லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.