75 அடி பள்ளத்தில் குடைசாய்ந்த முச்சக்கர வண்டி – இளைஞன் பலி

258 0
நானுஒயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஒயா கிலாசோ RD 1 என்ற பகுதியில் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 வயது இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக நானுஓய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்று (21) இரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான முச்சக்கர வண்டியின் சாரதி தப்பித்து செல்ல முற்பட்டபோது சாரதியை கைது செய்து நுவரெலிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நானுஓய பகுதியில் இருந்து கிலாசோ மேற்பிரிவு தோட்டபகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி மீண்டும் நானுஓயவை நோக்கி பயணித்து கொண்டிருந்த வேலை 75 அடி பல்லத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் பின்னால் சென்ற இளைஞனே இவ்வாறு உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் நானுஓய பெரகும்பர பகுதியை சேர்ந்த கே.யோகேஸ்வரன் என்ற இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் பலியான இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நானுஓய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.