சிட்டுக்குருவியை காக்கும் கிராமம்- குருவிக்காக இருளில் வாழும் கிராம மக்கள்

218 0

சிட்டுக்குருவிகள் கூடு கட்டினால் ஊருக்கு நன்மை பெருகும் என்ற நம்பிக்கையில், மின் இணைப்பு பெட்டியில், கட்டப்பட்டிருந்த கூட்டை களைக்காமல், இருளில் வாழ்ந்து வருகிறது ஒரு கிராமம்.

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே உள்ளது பொத்தகுடி கிராமம். இங்குள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு இணைப்பு பெட்டியில் குருவிக்கூடு கட்டி, முட்டையிட்டு அடைகாத்து வந்தது. இதையறிந்த கிராமத்து வாலிபர்கள், அதை பாதுகாக்க தொடங்கினர்.

தெருவிளக்குகள் எரிய மொத்த கன்ட்ரோல் ஸ்விட்ச்சும், குருவி கூடு கட்டிய மின் இணைப்பு பெட்டியில் இருப்பதால், சுவிட்சை ஆன் செய்யக்கூட முடியவில்லை. சுவிட்ச் போட்டால், குருவி பறந்து விடும் என்பதால், கடந்த 30 நாட்களுக்கும் மேலாக தெரு விளக்குகள் எரியாமல் இருளில் வாழ்ந்து வருகிறார்கள் பொத்தகுடி கிராமமக்கள்.

சின்னஞ்சிறிய குருவிகள் கூடு கட்டினால் நல்ல சகுனம் என்றும், ஊருக்கும் மக்களுக்கும், நன்மை அதிகரித்து, அதிர்ஷ்டம் பிறக்கும் என்று கூறுகின்றனர் அக்கிராம மக்கள்.

மின் கதிர்கள், செல்போன் கோபுரங்களால் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தேடி வந்த சிட்டுக்குருவி இனத்தை, மனிதேயத்தோடு பாதுகாத்து பொத்தகுடி கிராமமக்கள் எடுத்துகாட்டாக விளங்குகின்றனர்.