செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பி சாதனை புரிந்த ஐக்கிய அரபு அமீரகம்

297 0

ஐக்கிய அரபு அமீரகத்தின் வரலாற்று சிறப்புமிக்க செவ்வாய் கிரகம் செல்லும் விண்கலம் ஜப்பானிலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளே செவ்வாய் கிரகத்திற்க விண்கலத்தை அனுப்பியுள்ளன. முதன் முறையாக ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பி சாதனை புரிந்து உள்ளது.
கடந்த வாரமே இந்த விண்கலம் ஏவப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலையால் விண்ணில் செலுத்தப்படவில்லை.
ஜப்பானில் உள்ள தனேகஷிமா என்னும் இடத்திலிருந்து ஏவப்பட்ட இந்த விண்கலம் எச்-2 ஏ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இது செவ்வாய் கிரகத்தின் காலநிலை மற்றும் பருவநிலைகளை ஆராயும். இந்த விண்கலம் சுமார் 7 மாதம் பயணத்திற்குப்பிறகு செவ்வாய் சுட்டுவட்ட பாதையை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிபுணர்களிடம் பயிற்சி பெற்ற அமீரகத்தின் பொறியாளர்கள் இந்த விண்கலத்தை ஆறுமாதத்தில் உருவாக்கி உள்ளனர்.
கொலராடோ பல்கலைக்கழகத்தில் உள்ள விண்வெளி இயற்பியல் மையத்திலும், துபாயில் உள்ள முகமது பின் ரஷீத் விண்வெளி மையத்திலும் இந்த செயற்கைக்கோள் உருவாக்கத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தங்களது அடுத்த திட்டத்தினை தாங்களே வடிவமைத்துக் கொள்ளும் அளவிற்கான ஆற்றல் அமீரகத்திற்கு வந்துவிட்டது என்கிறார் கொலராடோ பல்கலைக்கழகத்தில் உள்ள விண்வெளி இயற்பியல் மையத்தின் மூத்த பொறியாளர்.
இந்த செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தின் சூழல் குறித்து புதிய அறிவியல் தகவல்களை வழங்கும். தண்ணீரை உருவாக்கத் தேவையான ஹைட்ரஜன், ஆக்சிஜன் இரண்டுமே செவ்வாயில் இருந்து வெளியேறிக்கொண்டே இருப்பது எப்படி என்பது குறித்து  அமீரகத்தின் விண்கலம் ஆய்வு நடத்துவதில் அதிக கவனம் செலுத்தும்.