தனியார் மருத்துவக் கல்லூரியில் துன்புறுத்திக்கொலை செய்யப்பட்ட குரங்கு-விசாரணைகள் ஆரம்பம்(காணொளி)

332 0

monkeyஇந்தியாவில் வேலூரில் இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பெண் குரங்கு ஒன்று கொடூரமாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் கடந்த 19ம் திகதி நண்பகலில் பெண் குரங்கு ஒன்று அங்கு தங்கியிருக்கும் மருத்துவ மாணவர்களின் அறைக்குள் நுழைந்துள்ளது.

அதனை பிடித்த மாணவர்கள் குரங்கின் கால்களை கட்டிப்போட்டு குச்சியாலும், பெல்ட்டாலும் அடித்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இதனால் குரங்கின் கால்களும், எலும்புகளும் உடைந்தன.

எனினும், மருத்துவ மாணவர்கள் இரும்பு கம்பியால் அதன் மர்ம உறுப்பை சிதைத்து அதனை கொடூரமாக கொலைசெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிதாபமாக உயிரிழந்த அந்த குரங்கை, அங்குள்ள பணியாளர்கள் சிலர் சமயலறைக்கு பின்னால் குழி தோண்டி புதைத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த வேறு சில மாணவர்கள், விலங்கின ஆர்வலர்களிடம் இது குறித்து புகார் தெரிவித்ததை அடுத்து, மருத்துவ கல்லூரிக்கு விரைந்து சென்ற விலங்குகள் நல ஆர்வலர்கள் குரங்கு புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எடுத்து அதனை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கினை புதைத்த இடத்தில் விலங்கின ஆர்வலர் தோண்டி எடுத்தபோது எடுக்கப்பட்ட காணொளியும் வெளியாகியுள்ளது.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்திற்கு சமூக வலைதளத்தில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், விலங்கின ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.