மாணவர்களின் பரீட்சைகளை ஒத்திவைக்க இடமளிக்க முடியாது- இலங்கை ஆசிரியர் சங்கம்

280 0

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் உயர்தரம் பரீட்சைகளை  கல்வியமைச்சு ஒத்திவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கல்வி செயற்பாடுகளில் முன்னெடுக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பாக ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களுடன் எவ்வித கலந்துரையாடல்களுமின்றி தன்னிச்சையாக செயற்பாடுகளை கல்வியமைச்சு முன்னெடுப்பதாகவும் அச்சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில் பரீட்சைகளை நடத்தும் திகதி குறித்து அறிவிப்பதை,  கல்வி அமைச்சு நாளுக்கு நாள் ஒத்திவைப்பதை இனி ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வாரகால விடுமுறை மேலும் ஒரு வார காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு நேற்று அறிவித்துள்ளது.

அதற்கமைய பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

குறித்த தினத்தில் தரம் 11, 12 மற்றும் 13ஆம் தர மாணவர்களுக்காக மாத்திரமே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலின் பின்னர் வரும் முதலாம் திங்கட்கிழமையான ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஏனைய தர மாணவர்களுக்காக பாடசாலைகளை திறப்பது பொருத்தமானது என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.