தபால் மூல வாக்களிப்பின் மூன்றாம் நாள் இன்று

361 0

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் மூன்றாம் நாள் வாக்குப்பதிவுகள் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளன.

நேற்றைய தினத்தைப்போன்று மாவட்ட செயலகங்கள், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், பாதுகாப்பு படைகள் முகாம்கள் மற்றும் சுகாதாரத் துறை அலுவலகங்கள் தவிர அனைத்து பொது நிறுவனங்களின் ஊழியர்களும் இன்று வாக்களிக்கவுள்ளனர்.

அதற்கமைய இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தபால் மூல வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளன.

கொரோனா அச்சம் காரணமாக ராஜாங்கனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிக்கான வாக்களிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பிரதேச செயலாளர் பிரிவினைத் தவிர்ந்த ஏனைய சகல பகுதிகளிலும் நேற்று முன்தினம் முதல் ஏழு நாட்கள் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வருகிறது.

அதற்கமைய கடந்த திங்கட்கிழமை சுகாதார சேவைகள் அதிகாரிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றி வாக்களிப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் எதிர்வரும் 16, 17ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியுமெனவும் அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இம்முறை 705,085 வாக்காளர்கள் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அளிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பதுடன், எதிர்வரும் பொதுத் தேர்தல் ஓகஸ்ட் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.