யாழ் மாவட்ட செயலகம் முன் வாள் வெட்டு!

254 0

பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலுள்ள யாழ் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் (மாவட்ட செயலகம்) முன்பாக  இன்ற (08) காலை இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மாவட்ட செயலகத்தில் சுற்றுச்சூழல் அதிகார சபை பிரிவில் கடமையாற்றும் மல்லாகத்தை சேர்ந்த பொன்னம்பலம் பிரகாஸ் எனும் உத்தியோகஸ்தர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அவரது மோட்டர் சைக்கிளும் சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தியோகஸ்தர் வழமை போன்று இன்றைய தினம் காலை கடமைக்காக வந்த போது, அவரை பின் தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிள் வந்த நால்வர் மாவட்ட செயலக வாயிலுக்கு அருகில் வழி மறித்து அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலில் கையில் வாள் வெட்டு காயத்திற்கு இலக்கான உத்தியோகஸ்தர் பாதுகாப்பு தேடி மாவட்ட செயலகத்தினுள் ஓடியுள்ளார். இதன்போதும், இருவர் அவரை பின் தொடர்ந்து மாவட்ட செயலக வளாகத்தினுள் புகுந்தும் தாக்குதலை மேற்கொண்டதுடன், வெளியில் வந்து, அவரது மோட்டார் சைக்கிள் மீதும் தாக்குல் மேற்கொண்டு அதனை சேதமாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான உத்தியோகஸ்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.