ஆயிரம் ரூபாயை வைத்து அரசியல் நாடகம் நடத்தவேண்டிய தேவை எமக்குக் கிடையாது- ஜீவன்

235 0

ஆயிரம் ரூபாயை வைத்து அரசியல் நாடகம் நடத்தவேண்டிய தேவை இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்குக் கிடையாது என அதன் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன், சௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியத்தையும் ஆறுமுகன் தொண்டமானின் வீரத்தையும் பின்பற்றியதாக தனது அணுகுமுறை அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அக்கரப்பத்தனையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் உரையாற்றுகையில், “ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வழங்குவதற்கு கம்பனிகள் இணங்கியுள்ளன. ஆனால், கூடுதலாக இரண்டு கிலோ கொழுந்தும் இறப்பர் தோட்டங்களில் மேலதிகமாக ஒரு கிலோவும் எடுக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். இதற்கு நாம் உடன்பட முடியாது.

அந்தக் கோரிக்கையை ஏற்றால் அப்பா என்னை மன்னிக்கமாட்டார். கம்பனிகள் வெள்ளையர் காலத்தில் போல்தான் தற்போது செயற்பட முற்படுகின்றன. இதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.

ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தை என்பது தேர்தல் நாடகம் என்று சிலரால் விமர்சிக்கப்படுகின்றது. சம்பளத்தை வைத்து தேர்தல் பிரசாரம் செய்யவேண்டிய தேவை இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்குக் கிடையாது. ஏனெனில் மக்கள் எமது பக்கமே உள்ளனர்.

அப்பா இறந்த பின்னர் சில தோட்டங்களில் துரைமார் ஆட ஆரம்பித்துள்ளனர். நாம் தற்போது அமைதியாக இருக்கின்றோம். இந்நிலையில் ஆறுமுகன் தொண்டமானின் மறைவின் பின்னர் ஏன் இந்த அமைதி என சிலர் கேட்கின்றனர். பொறுமைக்கும், அமைதிக்குமிடையில் வித்தியாசம் உள்ளது. நாம் பொறுமையாகவே இருக்கின்றோம். அதனை பலவீனமாகக் கருதவேண்டாம்.

மக்கள் எனக்கு தேர்தல்மூலம் அதிகாரத்தை வழங்கிய பின்னர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியத்துடனும் ஆறுமுகன் தொண்டமானின் வீரத்துடனும் அத்தனை பேரையும் நடுங்கவைப்பேன்.

இதேவேளை, கடந்த காலங்களில் கட்சி அடிப்படையிலேயே வீடுகள் பகிரப்பட்டன. கிராமங்களை உருவாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எமது திட்டமாகும். இளைஞர்களின் வேலையின்மைப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். அதற்கான திட்டங்கள் எம்மிடம் உள்ளன. மலையக பல்கலைக்கழகம் வந்த பின்னர் விடுதி முகாமைத்துவ கற்கை நெறியும் ஆரம்பிக்கப்படும். அதன்பின்னர் சுற்றுலாத்துறையில் கூடுதல் வேலைகளைப் பெறலாம்” என்று குறிப்பிட்டார்.