எதிர்வரும் ஓகஸ்ற் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாதிரி வாக்கு எண்ணும் நடவடிக்கை மன்னாரில் நடைபெற்றுள்ளது.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்கா மண்டபத்தில், மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.
சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக முகக்கவசம், கையுறை அணிந்து எவ்வாறு வாக்கு எண்ணும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது, குறைந்த எண்ணிக்கையில் அலுவலகர்களைக் கொண்டு எவ்வாறு வாக்கு எண்ணும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
குறித்த மாதிரி வாக்கு எண்ணும் நடவடிக்கையில் வன்னி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ், வவுனியா பிரதித் தேர்தல் ஆணையாளர், முல்லைத்தீவு உதவி தேர்தல் ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும், உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்கள், மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

