சர்வதேச நியமங்களின்படியே புலிகளின் போர் இருந்தது- கருணாவின் கருத்து சாதாரணமானதே- சிவமோகன்

277 0

யுத்த காலத்தில் போராளிகள், படையினர் மரணிப்பது சாதாரண விடயமே எனவும், அதனைத்தான் கருணா கூறியுள்ளார் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “யுத்தத்தின் போது நேரடியாக மரணிப்பதை ஒரு விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஒரு யுத்த காலத்தில் நேரடியாக சர்வதேச நியமங்களை ஏற்றுக்கொள்ளாமல் அதனை மீறி ஒரு நடவடிக்கை இடம்பெற்றிருந்தால் மட்டுமே அது ஒரு போர்க் குற்றமாக அல்லது வேறு ஒரு குற்றமாக மாற்றப்படலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தமட்டில் கருணா இருந்த காலத்தில் கூட சர்வதேச நியமங்களை ஏற்றுத்தான் யுத்தங்கள் இடம்பெற்றன.

ஆனால், இலங்கை அரசாங்கம் சர்வதேச நியமங்களை மீறி தமது நாட்டு மக்கள் மீது குண்டுகளை வீசிய செயல்கள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.