பொத்துவில் பிரதேசத்தில் காச நோயாளர்கள் அதிகரிப்பு

265 0

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் காச நோயாளர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருவதாக, பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.யூ. அப்துல் சமட் தெரிவித்தார்.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில், பொத்துவில் பிரதேசத்தில் கடந்த 06 மாத காலத்துக்குள் 09 காச நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இவை அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும், கூறினார்.

இது குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும், யாருக்காவது இரண்டு கிழமைக்கு மேற்பட்ட இருமல், மாலை வேளையில் இலேசான காய்ச்சல், சலியுடன் இரத்தம் வருதல் இருக்குமாயின் உடனடியாக மார்பு நோய்ச் சிகிச்சை நிலையத்துக்கு அல்லது வைத்தியசாலைக்குச் சென்று ஆலோசனையை பெற வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.

06 மாத காலத்துக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டால் இந்நோயிலிருந்து பூரணமாக குணமடையலாமெனவும், கூறினார்.

எனவே, காச நோய்க்கான அறிகுறிகள் தென்படுமாயின் நோயை மறைக்காமல் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும், மேலதிக தகவல்களை பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் பெற்றுக் கொள்ளலாமெனவும், தெரிவித்தார்.