வனவளத் திணைக்களத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

311 0

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சூரமோட்டை மக்கள் வனவள திணைக்களத்தின் அட்டூழியங்களை கட்டுப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சூரமோட்டை பகுதியில் போர்சூழல் காரணமாக 1980, 1990 காலப்பகுதியில் இடம்பெயர்ந்து இந்தியா உட்பட வேறுபகுதிகளிற்கு  சென்ற மக்கள் மீண்டும் வந்து காடுகளாக கிடக்கும் தமது காணிகளையும்,  தமது பெற்றோர்கள் வசித்த காணிகளை பிள்ளைகளும் துப்புரவாக்கி தற்காலிகமாக கொட்டில்கள் அமைத்து வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த காணிகள் தமக்குரியது என்று வனவள திணைக்களத்தால் நீண்டகாலமாக கூறப்படுவதுடன்  மக்கள் மீள், குடியேறுவதிலும், வீடுகளை அமைப்பதற்கும் வனவள திணைக்களம் தடையை ஏற்படுத்தி வருகின்றது.

காணிகளை துப்புரவாக்கினாலோ அல்லது கட்டுமான பணிகளை மேற்கொண்டாலோ கைது செய்வோம் எனவும் மக்களை எச்சரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களிற்கும், வனத்துறையினருக்கும் இடையில் அடிக்கடி முறுகல் நிலை ஏற்பட்டுவருகிறது.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா வடக்கு பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களிலும் கலந்துரையாடப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்ட நிலையில் இதுவரை சரியான தீர்வுகள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் வனவள திணைக்களத்தினால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்ற மக்கள். அனைத்து தரப்பினர் மீதும் நம்பிக்கை இழந்த நிலையில் தமக்கான தீர்வினை கோரி நேற்றையதினம் போராட்டத்தில் குதித்துள்ளனர். தமக்கான தீர்வு கிடைக்கும் வரையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.