சிறிலங்காவில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை எம்மால் பாதுகாக்க முடியாமல் போனால், அரசியல் வாழ்க்கையில் இருந்து முழுமையாக ஓய்வுபெறுவேன் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன சார்பில் கொழும்பு மாவட்டத்தில் அமைச்சர் விமல் வீரவன்ச போட்டியிடுகின்றார்.
இந்நிலையில் ‘மனச்சாட்சியின் சமூக ஒப்பந்தம்’ என்ற பெயரிலான தனது கட்சி பிரகடனத்தை, மகா சங்கத்தினர் முன்னிலையில் வெளியிட்டு வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தேர்தல் பிரகடனத்தை வெளியிட்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விமல் மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கம் எக்காரணத்திற்காகவும் எம்.சீ.சீ ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாது.
மேலும் சொந்த விருப்பு, வெறுப்பிற்காக மக்கள் சொத்துக்களை பயன்படுத்த மாட்டேன். இனவாதம், பிரிவினைவாதம், மதவாதம் என்பவற்றை அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாற இடமளிக்க மாட்டோம்.
அத்துடன் படைவீரர்களுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்க போராடுவேன்.நியாயமான சமூகத்தை உருவாக்க பங்களிப்பு செய்வேன்.
இதனால் எக்காரணத்திற்காகவும் எனது கொள்கையை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.